விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்ச...
ஈமு கோழி மோசடி - சுசி நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை.. ரூ.7 கோடி அபராதம்
கொங்கு மண்டலத்தை டிஸைன் டிஸைனாக ஏமாற்றிய மோசடிகளில் ஈமு கோழி மோசடி முக்கியமானது. ஈமு கோழிக்கும், இந்தியாவுக்கும் சம்பந்தமே இல்லை. ஈமு ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒரு வகை பறவை இனமாகும்.

அதை வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கடந்த 2010-11 காலகட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான நிறுவனங்கள் முளைத்தன. அதில் கொங்கு மண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முதலீடு செய்தனர்.
மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் கூட முதலீடு செய்தனர். இதில் சுசி என்கிற நிறுவனம் திரை பிரபலங்கள் மூலம் விளம்பரம் செய்து, ஆயிரக்கணக்கான முதலீடுகளை ஈர்த்தது. ஒவ்வொருவரும் அந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடும் செய்தனர்.

ஆனால் சொன்னபடி பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், சுசி ஈமு கோழி உரிமையாளர் குருசாமி மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் குறித்த விசாரணை கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் (டான்பிட்) நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 385 பேர் மோசடி செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி சுசி நிறுவன உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

குருசாமி ஏற்கனவே சிறையில் தான் உள்ளார். இதேபோல கடந்த ஜனவரி மாதம் மற்றொரு வழக்கில் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.19 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.