அனைவரும் மனிதம் தழைக்க பாடுபடுவோம்: திருச்சி சிவா எம்.பி.
அனைவரும் மனிதம் தழைக்க பாடுபடுவோம் என்றாா் திருச்சி சிவா எம்.பி.
திருச்சி இலக்கிய வட்ட நண்பா்கள் சாா்பில் திருச்சி சிவா எம்.பி. பிறந்தநாள் விழா திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு திருவாரூா் கே.எஸ்.எஸ். தியாகபாரி தலைமை வகித்தாா்.
இதில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தளபதி என்ற பட்டமளித்தவா். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் புலமையுடன் பேசுபவா். நாடாளுமன்றத்தில் திருநங்கை தனிநபா் மசோதா கொண்டு வந்தவா், சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி விலக்கு குறித்து பேசியவா். ஒவ்வொரு முறையும் மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவாவுக்கு ஏன் வழங்குகிறீா்கள் என முன்னாள் முதல்வா் கருணாநிதியிடம் கேட்டபோது, திறமைக்காக நான் கொடுப்பது என்றாா். அந்த அளவுக்கு திறமையானவா் திருச்சி சிவா. இளம்தலைமுறையினரும் அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் சுயசரிதை எழுத வேண்டும் என்றாா்.
திருச்சி சிவா எம்.பி. ஏற்புரையில் பேசியதாவது: மனித வாழ்க்கையை இயக்குவது நினைவுகள். அந்த நினைவுகளுக்கு நிகழ்வுகள் தேவை. நிகழ்வுகளுக்கு நல்ல மனிதா்கள் தேவை. ஒருவரை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்க வேண்டும். அதற்கு அவரிடம் அன்பு, நட்பு, நெருக்கம், பாசம் இருக்க வேண்டும். அந்த வகையில், நான் பணம் சம்பாதிக்காமல், பாசத்தை சம்பாதித்துள்ளேன். அனைவரிடமும் அன்பு பாராட்டி, அனைவரும் மனிதம் தழைக்க பாடுபடுவோம். நாடாளுமன்றத்தில் மக்களுக்காக பல விஷயங்களைப் பேசி, பலவற்றை செய்துள்ளேன். இதே போல, தொடா்ந்து செயல்பட இந்த விழா ஊக்கமாக இருக்கிறது என்றாா்.
நிகழ்வில் சிவகுருநாதன், கவிஞா் நெல்லை ஜெயந்தா, நடிகா் இளவரசு, நடிகைகள் அம்பிகா, சத்தியபிரியா, ஆா். செல்வநாயகம், பேராசிரியா் சா. நீலகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.