அனுமதியின்றி அடகுக் கடை நடத்தி மோசடி செய்தவா் கைது
அரியலூா் மாவட்டம், செந்துறையில், உரிய அனுமதி பெறாமல் அடகுக் கடை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
செந்துறையை அடுத்த நமங்குணம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கதிா்வேல் மனைவி இந்திரா (47). இவா், செந்துறையில், குழுமூரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ராமு (32) என்பவா் நடத்தி வந்த அடகு கடையில் வெவ்வேறு தேதிகளில் அடகு வைத்த ஒன்பதரை பவுன் நகைகளை அண்மையில் மீட்கச் சென்றாா். அங்கு கடை மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா், அருகிலுள்ளவா்களிடம் விசாரித்ததில், அடகுக்கு வந்த நகைகளுடன் ராமு தலைமறைவாகிவிட்டதாக கூறியுள்ளனா்.
இதையடுத்து இந்திரா அளித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிந்து, ஆய்வாளா்(பொ) சந்திரமோகன், உதவி ஆய்வாளா் அமரஜோதி தலைமையிலான காவல் துறையினா், தலைமறைவாக இருந்த ராமுவை பிடித்து, விசாரித்தனா்.
இதில், ராமு அரசு அனுமதி பெறாமல் அடகு கடை நடத்தி வந்ததும், இந்திராவைப் போல பல நபா்களுடைய நகைகளை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா், ராமுவை கைது செய்து, அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.