``இது என் அம்மா, மீண்டும் கடலில் வீசிவிடுங்கள்.." - ஒரு தாயின் ஆசைக்கு மகளின் நெகிழ்ச்சி செயல்!
இங்கிலாந்தின் ஓல்ட்ஹாம் பகுதி கடற்கரையில் கண்ணாடி பாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் சுருட்டப்பட்ட ஒரு காகிதம் இருந்தது. அந்தக் காகிதத்தில், ``இந்த பாட்டிலில் இருப்பது என் அம்மா... அவர் உயிருடன் இருக்கும்போது இந்த உலகை சுற்றிப்பார்க்க வேண்டும் என விரும்பினார். எனவே, உங்கள் கரங்களில் இந்த பாட்டில் கிடைத்தால் தயவுசெய்து மீண்டும் கடலில் எறிந்துவிடுங்கள்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த பாட்டிலையும், அதன் வாசகத்தையும் ஒரு பெண் சமூக ஊடகத்தில் பதிவிட்டு, ``இந்த அழகான பெண் இருக்கும் பாட்டிலை இன்று அதிகாலை ஸ்கெக்னஸ் கடற்கரையில் கண்டோம்... அந்தக் கடிதத்தில் கேட்டபடி மீண்டும் கடலில் வீசிவிட்டோம். மகிழ்ச்சியாக பயணியுங்கள் அம்மா" என சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.
இது தொடர்பாக பிபிசி வெளியிட்டிருக்கும் செய்தியில், ஓல்ட்ஹாமைச் சேர்ந்த 24 வயது காரா மெலியா என்றப் பெண், 51 வயதில் காலமான தன் தாய் வெண்டி சாட்விக்கின் சாம்பலை ஒரு பாட்டிலில் நிரப்பி அதில், சில வாசகங்களை எழுதி கடலில் வீசியிருக்கிறார். இது தொடர்பாக பிபிசியிடம் காரா மெலியா பேசினார்.

ஒரு தாயின் நிறைவேறாத கனவு
அப்போது, `` என் அம்மா வெண்டி சாட்விக் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என ஏங்கினார், ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஐந்து குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அவருக்கு இருந்தது. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அதற்கே செலவிட்டார். அவரின் பெரும் ஆசையே யாருக்கும் அவரைத் தெரியாத புதிய தேசத்தில் கொஞ்ச காலம் வாழ வேண்டும் என விரும்பினார்.
அவரின் மறைவு எங்களை கடுமையாக பாதித்தது. அவருக்கென அவர் எதுவும் செய்துகொள்ளவில்லை என்பதும் வேதனையாக இருந்தது. அதனால்தான் அவரின் சாம்பலை கடலில் வீசினேன்' என்றார். அவர் கடலில் வீசிய பாட்டில் அடுத்த 12 மணி நேரத்தில் ஸ்கெக்னஸ் பகுதியில் அந்த பாட்டில் கரை ஒதுங்கியது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.