வாய்க்காலில் 200 கிலோ மாத்திரைகள்; அகற்றிய மாசுக்கட்டுப்பாடு வாரியம்; அதிகாரிகள் சொல்வது என்ன?
200 கிலோ மாத்திரைகள்
திருப்பூர் கோவில்வழி-அமராவதிபாளையம் சாலையில், பி.ஏ.பி., கிளை கால்வாய் உள்ளது. இந்த வாய்க்காலில் சுமார் 200 கிலோ மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த மாத்திரைகளைக் கைப்பற்றி, மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடத்திய விசாரணையில், அந்த மாத்திரைகள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாராத நிலையங்களில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இரும்புச்சத்து, போலிக் ஆசிட் உள்ளிட்ட சத்து மாத்திரைகள் என்பது தெரியவந்தது.
இந்த மாத்திரைகள் அனைத்தும் 2024-ஆம் ஆண்டுடன் காலாவதியானதும் தெரியவந்தது.
இயக்குநர்களுக்கு நோட்டீஸ்
தொடர்ந்து, மருத்துவக் கழிவுகளைக் கையாளும் வாகனத்தின் மூலம் அவை அப்புறப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறை இணை, துணை இயக்குநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட சுகாதார நலக்குழுவினர் மாத்திரைகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இரும்புச்சத்து, போலிக் ஆசிட் மாத்திரைகள்
இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் ஜெயந்தி கூறுகையில், ''அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மக்களுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரைகள், பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது.
இரும்புச்சத்து, போலிக் ஆசிட் மாத்திரைகள் நிறைய இருந்துள்ளன. இவற்றை யார் கொட்டியிருப்பர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
அருகில் உள்ள மாநகர நகர் நல மையம், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருந்து இருப்பு, அது நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட விவரங்களைச் சேகரித்து வருகிறோம்'' என்றார்.