கேரளத்தில் தீவிரமடையும் பருவமழை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
சென்னை மாநகராட்சி: டெலிவரி பாய்கள், டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ஓய்வு அறை; என்னென்ன வசதிகள் உள்ளன?
சாலைகளில் அங்குமிங்கும் இருசக்கர வாகனங்களில் பறந்து உழைத்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் டெலிவரி வேலை செய்பவர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்ட இணையத் தொழிலாளர்களுக்கு ஓய்வெடுப்பதும், குறிப்பாக பெண் இணையத் தொழிலாளர்களுக்குக் கழிவறை வசதியும் பெரும் சவாலான விஷயமாக இருந்து வருகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாக சென்னையின் அண்ணாநகர், கே.கே நகர்ப் பகுதிகளில் இணையத் தொழிலாளர் கூடம் பெருநகர சென்னை மாநகராட்சியால் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்தக் குளிர் அறையில் 25 பேர் வரை ஓய்வெடுக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. சார்ஜிங் பாய்ண்ட்டுகள், நவீன கழிவறைகள், அமைதியாக ஓய்வெடுக்குப்பதற்காகக் கண்ணாடியால் ஆன குளிர் அறைகள் என இது 20 அடி நீளம், 10 அடி அகலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
முதற்கட்டமாக இரண்டு பகுதிகளிலும் மட்டும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த இணையத் தொழிலாளர் கூடம் அடுத்த மாதங்களில் சென்னையின் பல பகுதிகளில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதையடுத்து மற்ற மாநகராட்சியில் இவை விரிவாக்கம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த இணையத் தொழிலாளர் கூடத்தில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருப்பதால் பாதுகாப்பிற்குப் பிரச்னையில்லை.
குறிப்பாக, இது பெண்களுக்கும், இரவில் பணிபுரிபவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 11ம் தேதியான நாளை முதல் இது பயன்பாட்டு வருகிறது.