கனமழை: 7 மாவட்டங்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாள்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், அடுத்த 6 நாள்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதேபோல், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 7 மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதிகனமழையை எதிர்கொள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி, மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.