Ahmedabad Plane Crash: "அந்த ஒருவரைப் பார்த்தேன்; உடல்களை மீட்கும் பணி முடிந்துவ...
மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா! சில எளிய டிப்ஸ்...
மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள அப்படி... இப்படி... என ரொம்பவெல்லாம் கஷ்டப்படாமல், கீழ்காணும் இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் என்கின்றனர் உளவியல் ஆலோசகர்கள்.
முதலில், வாழ்க்கையில் இல்லாததை நினைத்து வருத்தப்படுவதை விடுத்து, இதெல்லாம் இருக்கிறதே என எண்ணி திருப்தியுடன் இருக்க பழகிக்கொள்ள வேண்டுமாம். நம் வாழ்வில் நேர்மர்றையாக என்னவெல்லாம் நடந்துள்ளது என்பதை நினைத்துப்பார்த்தால் இவ்வளவு விஷயங்கள் நல்லதாக நடந்திருக்கிறதா என்ற எண்ணம் மனதில் தோன்றும்... மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
ஒளிமயமானதொரு எதிர்காலம் நமக்கு காத்திருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது முக்கியம். இனி வருங்காலம் சந்தோஷமானதாக சிறப்பாக அமையும் என்று அவ்வப்போது கற்பனை செய்து பார்த்துக் கொண்டால் கவலை பறந்தே போய்விடுமாம். இதனால், நாம் விரும்பும் இலக்கை அடையவும், நமக்கு பிடித்த வாழ்க்கையை நோக்கியும் செயல்பட, மூளை மனதைத் தூண்டும்.
தினசரி குறைந்தது 5 நிமிடமாவது தியானம் செய்வது மனதை புத்துணர்ச்சியாக்கும். மனதை, சிறிது நேரம் ஒருநிலைப்படுத்தி தியானிப்பதால் சிந்தனை தெளிவடைவதுடன் மனதில் அமைதியும் மகிழ்ச்சி உணர்வும் குடிகொள்கிறது.
முக்கியமானதாக, நமக்கு நாமே என்ன பேசிக்கொள்கிறோம் என்பது முக்கியம்.
நான் இதைச் செய்திருக்கக்கூடாது!
இப்படி நடந்திருக்கக்கூடாது!
என்று நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொள்ளாமல் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நம்மைப் பற்றி நமக்குள்ளேயே எதிர்மறை எண்ணங்கள் உதிக்கும்போது, அன்பு, கருணை உணர்வுகளை வளர்த்துக்கொண்டால் இதுபோன்ற எதிர்மறை எண்ணங்கள் மெல்ல மறைந்து போகும்.
அடுத்ததாக, தினசரி அரை மணிநேரமாவது நடைப்பயிற்சி அல்லது ஏதேனும் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். அப்போது, நமது உடலில் எண்டோர்ப்பின்ஸ், செரெடோனின் ஆகிய வேதியியல் பொருள்கள் உருவாகின்றன. உடலையும் மனதையும் மகிழ்ச்சியான தெளிவான நிலையில் வைத்துக்கொள்ள மேற்கண்ட வேதியியல் பொருள்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இவற்றால், மன அழுத்தம் உருவாவது வெகுவாக குறைகிறது.
மேலும், நமது நண்பர்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவழிப்பதும் முக்கியம். அப்போது, மகிழ்ச்சி உணர்வைத் தரும் ஆக்ஸிடாசின் ஹார்மோன் உடலில் சுரந்து மனது இலகுவாகிறது.
கருணை உணர்வுடன் நடந்து கொள்வதும் மனதை மகிழ்ச்சியில் திளைத்திருக்கச் செய்யும். பிறருக்கு உதவுதல் உள்ளிட்ட ஏதேனுமொரு சமூகச்சேவை செயல்களில் ஈடுபடுவது நம்மை அறியாமலேயே மனதை நிம்மதியாக்கி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறது.
உடலுக்கும் மனதுக்கும் நல்ல தூக்கம் அவசியம். நாளொன்றுக்கு 7 - 8 மணிநேரம் தூங்குவதால் மூளை ரிலாக்ஸ் ஆகி, உணர்வு ரீதியிலான பிரச்னைகள் உடலில் எழாமல் பார்த்துக்கொள்ள உதவுகிறது.
இன்றைய அவசர உலகில், வேகமாக எதையும் செய்து முடித்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கச் செல்வோம் என்ற மனப்போக்கு நிறைய பேரிடம் இருக்கிறது.
இதனிடையே, சற்றே நிதானமாகச் செயல்பட்டு அன்றாடம் நாம் கடந்து செல்லும் செயல்களை கொஞ்சம் ரசிக்க பழக வேண்டும். இதனால், மன அழுத்தத்தை தவிர்க்கலாம். உதாரணமாக, காலையில் சூரிய உதயத்தை வானில் பார்ப்பது, நாம் எடுத்துக்கொள்ளும் டீ/காஃபியை ருசித்துப் பருகுவது, மனதுக்குப் பிடித்த நல்ல இசையை/பாடலை கேட்பது ஆகியவற்றைச் செய்யலாம்.
கடைசியாகச் சொல்லப்போவதை பின்பற்றுவதென்பது கடினமானதாக இருக்கலாம். ஆனால், இதனையும் பழகிக் கொள்ள வேண்டுமாம்.
ஸ்மார்ட்போன்களில் கொட்டிக்கிடக்கும் சமூக வலைதளச் செயலிகள், இணையதள பக்கங்களில் செலவிடும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களுக்காக வாழ்க்கையின் பொன்னான நேரத்தை அதிகம் ஒதுக்கிக் கொண்டேயிருந்தால்... மனதில் ஒருவித சிறுமை எண்ணமும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படக்கூடும் என்கின்றனர் உளவியல் ஆலோசகர்கள்.
‘அவரைவிட நாம் வருமானம் குறைவாக சம்பாதிக்கிறோமே!, அவர் சொகுசாக வாழ்கிறாரே!, நம் வாழ்க்கை எப்போது முன்னேறும்! இப்படிப் பல எதிர்மறை எண்ணங்கள் நமக்குள் குடியேறிவிடும்.
இவற்றை தவிர்க்கவும் தப்பிக்கவும், நிஜ உலகில் நம் அருகே இருப்போருடனும் உறவாடி வாழப் பழகிக் கொள்ள வேண்டுமாம்...
Don't WORRY... Be HAPPY!