சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!
Li Qingzhao: 'வன அன்னத்தின் பாதை' - லி சிங் சோவ் | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 13
சமீபத்தில் இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, லி சிங்சோவ் (Li QingZhao) இடைச்செருகலாக வந்தாள். அப்போது பெயரை மட்டுமே குறித்து வைத்துக்கொண்டேன்.
பிறகொரு நாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்குச் சென்றபோது எதேச்சையாக மீண்டும் பார்வைக்குள் சிக்கினாள்; கடந்த ஆயிரமாண்டுகளில் சீனாவின் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக அறியப்படுபவர்.
புராதன சீனாவில் டாங் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பின் நடந்த தொடர் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிணைத்து, சொங் வம்சம் நிறுவப்பட்டது.
சீனாவின் வர்த்தகம் செழித்து மக்கள் ஓரளவு மகிழ்வாக இருந்தபோது, அண்டை நாடுகளிலிருந்து அச்சுறுத்தல்கள் வரத்தொடங்கின. ஒவ்வொரு அரச மரபும் நாட்டின் அரசியல், கலாசார வளர்ச்சியை வலியுறுத்தி பக்கத்து நாடுகளுடன் சமாதானத்தை நாடின.
அப்போது மிங், சொங், தாங், ஷாங் எனப் பல முக்கிய அரச வம்சங்கள் பிரிக்கப்பட்டு அதிகாரபூர்வ அரசியலமைப்பு உருவாகியது.
சீன அரச வம்சங்கள், தொழில், கல்வி வளர்ச்சியை, நோக்கமாகக் கொண்டு நாட்டின் எல்லைகளை வகுத்தன. ஆயிரமாண்டுகளில் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக லி சிங்சோவ் அறியப்படுகிறார்.

இலக்கிய ஆர்வம் கொண்ட குடும்பத்தில் கி.பி. 1084 ஆம் ஆண்டு பிறந்தவள். அரசக் குடும்பத்துப் பெண்களுக்குத் தரப்படும் கல்வி அவளுக்கும் தரப்படுகிறது. ஒரு நாள் டாங் வம்சத்திய நூலொன்றில் வேடிக்கைக் கதை ஒன்றைப் படிக்கிறாள்.
அதில் இரவு விருந்திற்கான அழைப்பிதழ்களை அனுப்பிவிட்டு ஒரு பிரபலப் பாடகரைப் பாட அழைக்கிறார்கள். அதனை வேடிக்கையாகச் செய்ய வேண்டுமெனத் திட்டமிடுகின்றனர். ஒரு வேலைக்காரர் போல் உடையணிந்து அவர் அறைக்குள் நுழைந்தபோது யாரும் அவரைக் கவனிக்கவில்லை ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரென நினைத்து உதாசீனப்படுத்துகிறார்கள்.
விருந்தின் இறுதியில் தொகுப்பாளர் மேடையில் ஏறி, நகைச்சுவையாக, "எனது நண்பர்களில் ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவர் நமக்காக விருந்தில் பாடல்களைப் பாடுவார்" என்றவுடன் எல்லோரும் அமைதியாக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர், பாடகர் யார் என்று பார்க்கிறார்கள்.
அனைவரும் வியக்கும் வகையில், கிழிந்த ஆடையணிந்த வேலைக்காரர் முன்னே வந்து பாடத் தொடங்குகிறார். அரங்கம் அலறத் தொடங்குகிறது. முதலில் காந்தக் குரலில் பாடல் ஒலிக்க, நகைச்சுவை பகிரப்பட்டது போலச் சிரித்தனர். விரைவில் அந்தப் பாடல் இதயத்தின் ஆழத்தைத் தொடுவதை உணர்ந்து அமைதியாகினர்.

பாடல் முடிந்ததும் எழுந்து நின்று விருந்துக்கு வந்தவர்கள் கைதட்டினர். வேலைக்காரர் போல் உடையணிந்தவர் உண்மையில் டாங் வம்சத்தின் சிறந்த பாடகரான வாங் பாயோஷன்.
இந்தக் கதையைப் படித்து முடித்ததும் அவள் வெடித்துச் சிரிக்கிறாள். உலகம் எவ்வளவு பாசாங்குத்தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது;
ஒரு நூலின் அட்டையை வைத்தே மதிப்பிடுவதைப் போல மனிதர்கள் மதிப்பிடப்படுகிறார்கள் என்று எண்ணி வருந்தினாள்.
அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த அறிஞர்களின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட சிங்சோவுக்கு கவிதைக் கலையில் ஈடுபாடு ஏற்பட்டது. அவளைச் சுற்றி கவிஞர்களும் கவிதைகளும் இருந்தன. ஆனால், அவை உணர்வு நுட்பமற்ற செய்யுள்களாக இருந்தன.
பெரும்பாலானவை மோசமாக எழுதப்பட்டவை; குறிப்பாக அவை ஆண்களால் எழுதப்பட்டவை. கவிதை நடை மிடுக்காகவும் இலக்கண இறுக்கத்தோடும் இருந்தன. போர் மற்றும் மெய்கீர்த்திக் கவிதைகளாக இருந்தன.
உள்ளடக்கத்திலும் மொழியிலும் ஒரு புதிய வகைக் கவிதையை உருவாக்க முடியுமா என்று லி சிங்சோவ் யோசிக்க ஆரம்பித்தாள். கவிதைகள் இயல்பாகவும் புதிய உணர்வைத் தருவதாகவும் இருக்கவேண்டுமென்று கருதினாள். ஆடம்பர வார்த்தைகளைப் பயன்படுத்துவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

பிரபல அறிஞரும் சொங் வம்சத்தின் பிதாமகனுமான வாங் அன்ஷி செல்வத்தின் மீது பேராசை கொண்ட பழங்குடியினரின் அச்சுறுத்தலும், வன்மமும் கருமேகங்கள் போலத் திரண்டிருப்பதாக அவளது தந்தையுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சிங்சோவ் அறைக்குள் நுழைந்து, "அப்பா, நான் எழுத விரும்புகிறேன்" என்கிறாள். அவளது தந்தை லி கெஃபியோ அமைதியாகச் சிரித்தார்.
சிங்சோவ்வின் ஆர்வத்தைப் பார்த்து வாங் அன்ஷி வியந்தார். அவளுடைய புத்திசாலித்தனத்தை மெச்சினாலும் பழைய மனோபாவத்தைக் கொண்டிருந்தவர் என்பதால், "சிங்சோவ் நீ எழுத விரும்புகிறாயா?" என ஆச்சரியத்துடன் கேட்டார். அவரது குரலில் சிறிய கண்டனம் இருந்தது.
"நான் விரும்பும் போது எழுதுகிறேன்" என வாங் அன்ஷியின் கேள்விக்குச் சிங்சோவ் நேரடியாக அப்பாவின் கண்களை நோக்கி புத்திசாலித்தனமாகவும் தைரியமாகவும் பதில் சொன்னாள்.
"எனக்குப் புரிகிறது, நீ அப்படிப்பட்ட சரியான குடும்பத்தில்தான் பிறந்திருக்கிறாய்" என அறிஞர் வாங் அன்ஷி அவளது தந்தையைப் பார்த்து வெடித்துச் சிரித்தார். அவளது தந்தை வெட்கப்பட்டார்.
அவர்களது உரையாடலில் இருந்த முரண்பாட்டை விழுங்குவது போல முகத்தைச் சுழித்துக் கொண்ட சிங்சோவ், "கவிதையை விரும்பும் பெண்கள் பலர் இருக்கிறார்கள் நானிங்குத் தனியாக இல்லை. கவிதைகள் எழுதுவதை இப்போதே தொடங்குகிறேன்." என்று சொல்கிறாள்.
வாங் அன்ஷி ஏளனமாகச் சிரித்தபடி, சிறு பெண்ணின் ஆசை, ஏதோ உளறுகிறாளென்று நினைத்து அறையை விட்டு வெளியேறினார்.

அவளுடைய அம்மா, புத்திசாலித்தனமான கருத்துகளைக் குடும்பத்தினரிடம் கூறும்போதெல்லாம் தாத்தா பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்.
‘நீ ஆண் குழந்தையாக இருந்தால் மட்டும்தான் இதையெல்லாம் சொல்ல முடியும்’ என அலட்சியப்படுத்தியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் சுவரில் ஒரு சுருளைத் தொங்கவிட்டு ‘இங்கேயே படித்து மகிழ்ச்சியாயிரு’ என்று சொல்லி அவளது தாயார் எழுதுவதற்கும் யாரும் ஆதரவளிக்கவில்லை.
வசந்தகாலம் தொடங்கியதும் பூக்களைப் பார்க்க விரும்பினாள். மலைகள், மலர்களால் இன்னும் பனியால் மூடப்பட்டிருந்தன. தூரத்திலிருந்த பனியின் புகை அவளைக் கவர்ந்தது.
காற்றின் நறுமணத்தை விரும்பினாள். வளைந்து நெளிந்தப் பாதையில் மணிக்கணக்கில் அங்கேயே இருக்க ஆசைப்பட்டாள். தன் தோழிகளுடன் தாமரை மலர்களுக்கு நடுவே ஒளிந்து விளையாடுவதும் ஆற்றங்கரைக்குச் செல்வதும் அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தன.
பெற்றோருடன் அமர்ந்து அடிக்கடி மது அருந்துவாள். ஒரு நாள், அவள் தந்தை அரசவைக்குச் சென்றபின் சமையலறையிலிருந்த மது போத்தலை எடுத்துக்கொண்டு பல வருடங்களாக நெருங்கிய நண்பன் ஜாவோ மிங்செங்கைச் சந்திக்க ஒரு மண்டபத்திற்குச் சென்றாள்.

சிறிது நேரம் கழித்து, உயரமான, அழகான இளைஞன் அங்கு வந்தான். சிங்சோவ் சிரித்துக்கொண்டே அவனுக்கொரு கோப்பை மதுவை ஊற்றிக் கொடுக்கிறாள். அதை வேகமாகக் குடித்துவிட்டு நீண்ட சிரிப்புக்குப் பிறகு, அவர்கள் கவிதை எழுதுவதைப் பற்றிப் பேசுகிறார்கள்.
பிடித்த கவிஞர் யாரெனக் சிங்சோவ் அவனிடம் கேட்கிறாள். மிங்செங்கோ, சிறிது நேரம் யோசித்துவிட்டு, "நிச்சயமாக, அது உன் தந்தையின் குருவான சு ஷியாக இருக்க வேண்டும். அவருடைய எழுத்து பிரமாண்டமானது” என்கிறான்.
"சு ஷியின் சகோதரியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என ஆர்வத்துடன் கேட்கிறாள். "அவள் திறமையானவள். அந்தக் குடும்பத்தில் அவளால் நல்ல கல்வியைப் பெற முடிந்ததில் ஆச்சரியமில்லை" என்கிறான்.
அழகானவன். வரலாற்று நூல்களைப் படிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டிர்ந்தாலும் நவரத்தின உயர்ரகக் கற்கள் மீது ஈர்ப்பு இருந்தது.
ஒருமுறை ஆற்றங்கரையிலிருந்து சேகரித்ததைப் பைக்குள் வைத்து எடுத்து வந்திருந்தான். அதனைச் சிங்சோவ்விடம் காட்டினான்.
ஒரு பலகையில் படுத்துக்கொண்டே சிங்சோவ், "நான் அவளைப் போல அல்லது அவளை விட நன்றாக இருக்க விரும்புகிறேன்" என்று தளர்வான குரலில் கூற, மிங்செங் அவளிடம் சவால் விடுகிறான். “வரலாற்றில் பல பிரபலமான, திறமையான பெண்கள் இருக்கிறார்கள் நீயும் அவர்களைப் போல இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்” என்கிறான்.

"கற்பனை செய்து சொல்லுங்கள், ஒரு முத்தைப் போல இது இருக்கிறதா. அதுதான் கற்களைப் பற்றிய ஆச்சரியமான விஷயம். கலைக்கு இயற்கைதான் உந்துதல். கற்களின் வெவ்வேறு வடிவங்கள் வெவ்வேறு தன்மையைக் கொண்டவை.
எங்களது பரம்பரையில் ஆபரணக் கற்கள், ரத்தினங்களை அழகிய வண்ணங்களுக்காகவும், வடிவங்களுக்காகவும் சேகரிப்பதை விரும்புகிறார்கள். கற்களின் பின்னால் உள்ள இயற்கையின் படைப்பாற்றலை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், இப்போது சொல்லுங்கள், இது இன்னும் வெறும் கல்தானா?" என்று சிரிக்கிறாள்.
அவன் எரிச்சலாகி வேகமாக அந்தக் கல்லைப் பைக்குள் போட்டுக் கொண்டு, "பெண்கள் எப்பொழுதும் குறுகிய பார்வை கொண்டவர்கள், கல்லை உன்னிப்பாகக் கவனித்தால் ஜென் தத்துவம் பொதிந்திருப்பதைக் காணலாம்.
கல்லையோ ரத்தினத்தையோ கையில் எடுத்தால் இயற்கையில், காலநிலையில் வெவ்வேறு வடிவங்களில் செதுக்கப்பட்ட பருவநிலைகள் புரியும்”, என்கிறான்.
சிங்சோவ் ஆர்வம் காட்டுவது போல் தலையாட்டினாள். கண்கள் பாதி சிரித்து பாதி ஏளனம் செய்தன. அவளுக்கு வந்த எரிச்சலைத் தவிர்க்கப் படகில் செல்வோம் என்று எழும்பினாள்.
சிங்சோவ்வைப்போல உற்சாகமாக இல்லாவிட்டாலும் படகில் செல்வது அவனுக்குப் பிடித்திருந்தது. ஆற்றோரத்தில் பூக்கள் வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு, மஞ்சள் எனப் பல நிறங்களில் மலர்ந்திருந்தன. பசுமையான ஏரி விரித்துப்போட்ட கம்பளம் போலிருப்பதாகச் சிங்சோவுக்குப் பட்டது.
மதுவின் நெடியில் தூண்டப்பட்ட சிரிப்பு ஆற்றில் எதிரொலித்தது, நைட்டிங்கேல்களின் சிரிப்புடன் மிங்செங் படகை ஓட்டினான். தண்ணீரில் கைகளை நனைத்து மகிழ்கிறாள்.
மிங்செங் அவளை முட்டாள்தனமாகப் பார்ப்பதைக் கண்டு, அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள். அவள் கண்களில் குறும்பு தெரிந்தது.

தாமரை மலர்கள் நிறைந்த கால்வாயில் படகை வேகமாக ஓட்டினான். படகோட்டியை நிறுத்தி, துடுப்புகளை இழுத்துப் படகை தன் விருப்பப்படி நகர்த்தினான். தாழ்வான படகில் சென்ற அவர்களை மலர்கள் உரசின.
ஒரு பெரிய தாமரை மலருக்குள் தன் முகத்தைப் புதைத்து சிங்சோவ் சிரித்தாள். அவர்கள் படகில் படுத்து, வானத்தைப் பார்த்தனர். இயற்கையின் போதையில் மிதந்தனர்.
அந்திசாயும் நேரத்தில் சூரியன் மேற்கில் சரிந்தது. திரும்பிச்செல்லும் நேரம் வந்துவிட்டதென எழுந்தமர்ந்து படகை மீண்டும் மேற்கு மண்டபத்திற்குத் தள்ளத் தொடங்கினான். இருப்பினும் அதிகமாக மது அருந்திய போதைக்களைப்பின் கண்களால், மங்கலான வெளிச்சத்தில் தாமரைப் பூக்களைப் பார்க்கிறாள்.
தாமரை மலர்கள் ஆற்றில் நடனமாடுகின்றன
அந்தி வெளிச்சம் நிலத்தைச் சிவப்பில் குளிப்பாட்டுகிறது
இது டாங் அரச மரபினரின் கவிதை என்று சொல்கிறான் மிங். நான் என் தனிக்கவிதையை எழுதுவேன், என்கிறாள். பெண்களால் கவிதை எழுத முடியுமென நம்பவில்லை என்கிறான்.
படகை இழுத்துத் தள்ளிக் கோபமாக இறங்கி வெளியேறினாள். வீட்டிற்கு வந்தவுடன் எதிரில் அவள் தந்தை வந்தார். தனக்கொரு கோப்பை மது வேண்டுமென்கிறாள். உடைகள் ஏன் நனைந்திருக்கின்றன என்று கேட்டார் தந்தை. மதியம் வெளியில் சென்றேன். அதைப்பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேனெனத் தனது முதல் கவிதையை வாசிக்கிறாள்.
நான் எப்போதும்
மேற்கு மண்டபத்திற்குப்
படகில் சென்றதை நினைவில் வைத்திருப்பேன்
மகிழ்ச்சியாகக் குடித்தோம்
தடங்கள் தொலைந்துபோய்
எங்கே செல்வது? எங்கே செல்வது?
கடல் சிணுங்கியபடி நீரைத் தெளித்தது,
இன்னும் இன்னும்…
தந்தை கவனமாக இக்கவிதையைப் படித்துவிட்டு வித்தியாசமாக எழுதியிருப்பதாகப் பாராட்டினார். சில வரிகளால் தனது மகிழ்வான மதியப் பொழுதை அவளால் சித்திரம் போல் வரைய முடிந்ததை எண்ணி ஆச்சரியப்பட்டார். கடலையும், அந்தி மறைவதையும் கடல் சிணுங்குவதையும் அழகாக அவர் மகளால் சொல்லமுடிவதை எண்ணி அவருக்குப் பெருமை.
எளிமையான வெளிப்பாடு, புதிய பார்வையுடன் அவளுக்குள் இயற்கையாகவே ஏற்படுத்திய மாற்றத்தைக் கண்டு மெச்சினார். அவருடைய பதிலுக்காகக் காத்திருந்தவளுக்கு இதை வெளியிடலாமெனச் சொன்னதும் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்றாள். தன்னுடைய சகோதரனைவிட நன்றாக எழுதி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென நம்பினாள்.

அவளுடைய முதல் கவிதை வெளியானவுடன் உண்மையிலேயே உன் மகள் எழுதிய கவிதைதானா எனப் பலரும் அவரிடம் கேட்டார்கள். பொதுமக்களிடம் பெரிய வரவேற்பு இல்லை சிறுமி தன் வயதுக்கேற்ப ஏதோ கிறுக்கியிருக்கிறாள் என விட்டுவிட்டார்கள்.
வருத்தத்துடன் வெளியிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து வேகமாக ஆடிக்கொண்டிருந்தவள், அவசரமாக இறங்கி அறைக்குள் ஓடிவந்து அடுத்தக் கவிதையை எழுதுகிறாள்.
நான் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தேன்
விருந்தினர் வந்திருப்பதாகச் சொன்னார்கள்
சோவ் மிங் செங்கின் தந்தைதான்
கைகளைக் கழுவ நேரமில்லை
நெற்றியில் இன்னும் வியர்த்திருந்தது
காலில் காலணியின்றி அவசரமாக ஓடினேன்
என் கூந்தலிலிருந்து தங்க ஊசி தரையில் விழுந்தது
நான் வெட்கத்துடன் வேகமாகச் சென்றேன்
திடீரென என் மனத்தை மாற்றிக்கொண்டு
திரும்பிப் பார்க்கிறேன்
இளம்பச்சை நிறப் பிளம்ஸின் நறுமணம்
என் முகத்தில் வீசியது
தாளை முகத்தில் வைத்து மறைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தாள். அவளுடைய மனத்தில் மிங்செங்கின் முகம் முன்னால் வருகிறது. அவன் தந்தையைச் சந்தித்தபிறகு, சிங்சோவ் படுக்கையில் படுத்தபடி அவனுடைய நினைவில் மூழ்கினாள். தனது காதலைப் பெற்றோரிடம் வெளிப்படையாகப் பேச முடியவில்லை. இயற்கையின் அழகையும் ரகசியக் காதலையும் எண்ணியபடியே தூங்கிவிட்டாள்.
அன்றிரவு ஒரு கனவு. அதில் அடர்ந்த மூடுபனியில் நடந்துசெல்கிறாள். இறுதியாக ஒற்றையடிப் பாதையைக் கண்டடைகிறாள். அதன் திசையில் நடக்கிறாள், மக்கள் நிறைந்த இடத்திற்கு வருகிறாள்.
சாலை வெண்ணிறப் பனியில் முழுகியிருக்கிறது. திகிலுடன் திரும்பி ஓடி வரும்போது திடீரென ஓர் இளைஞன் அவள் கனவில் தோன்றுகிறான். அவன் மிங்செங்கைப் போலவே இருக்கிறான்.

அவள் கைகளை நீட்டி, அவனது கைகளைப் பிடிக்க முயல்கிறாள். ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு அவர்களைப் பிரித்துவிடுகிறார்கள்.
கனவிலிருந்து எழுந்து, "தயவுசெய்து, என்னைக் காப்பாற்றுங்கள்!" எனக் கத்துகிறாள். அது வெறும் கனவென்று புலப்ப்பட்டது. கோப்பையில் மதுவை ஊற்றிக் குடித்துவிட்டு, அந்தக் கனவு உரைத்த தரிசனத்தை அறியாமல் எழுந்து வந்து, வெளியே எட்டிப் பார்க்க கதவைத் திறந்தாள்.
மழை பெய்து நின்று நிலம் இன்னும் ஈரமாக இருந்தது. முன்தினம் புத்துணர்ச்சியோடும், உயர்ந்தும் இருந்த பூக்கள் இப்போது மௌனமாக வாடி, சேதமடைந்து தரையில் கிடந்தன.
தரை சிவப்பு போர்வையால் மூடப்பட்டிருந்தது. எல்லா இடங்களிலும் புயலின் சீற்றம். பூக்கள் வாடி, மஞ்சள் நிறக் கிளைகள் உயரம் குறைந்து காற்றில் ஊசலாடின.
நேற்றிரவுசூறைக்காற்றுப் பலமாக வீசியது.
அதிகாலை குளிர்காற்று என்னைத் தீண்டவில்லை
இரவு நான் அதிகமாகக் குடித்திருந்ததால்
என்னுடைய பணிப்பெண்ணிடம் கேட்டேன்
கதவை யார் மூடியது?
தோட்டமெல்லாம் சோகமாகக் காட்சியளிக்கிறது
சீன கிராப் ஆப்பிள் மலர்கள்
இன்னும் பூத்துக்கொண்டிருக்கின்றன
யாருக்குத் தெரியும்? யாருக்குத் தெரியும்?
இலைகள் பசுமையாக இருந்திருக்க வேண்டும்
பூவிதழ்கள் சிவப்பு நிறத்தில் இருந்திருக்க வேண்டும்
மீண்டும் இக்கவிதையைத் தன் தந்தையிடம் சென்று காட்டினாள். அவர் தனது மகளைப் பற்றி ரகசியமாகப் பெருமிதமடைந்தார். அவளிடம் சொல்லாமல், அவளுடைய சமீபத்திய இரண்டு கவிதைகளையும் அச்சிட உத்தரவிட்டார். பதினேழு வயதிலேயே கவித்திறம் வாய்ந்த இளம்பெண்ணை அனைவரும் பாராட்டினர். இந்த இரண்டு கவிதைகளும் திருமணமாகாத ஓர் இளம்பெண்ணின் துயரங்களை வெளிப்படுத்தின. அவள் இயற்கையிலும் காதலிலும் உணர்வுபூர்வமாக இருந்தாள்.
வாங் அன்ஷி, கவிதைகளைப் படித்துவிட்டு தனது கருத்தை மாற்றிக் கொண்டு சிங்சோவ்வின் தந்தையிடம், "லி சிங்சோவ் ஒரு புதிய நடையை உருவாக்குகிறாள். நம் வம்சத்தில் திறமையான ஓரிருவரால் மட்டுமே இவ்வளவு சுத்தமாகப் புதிய நடையில் எழுத முடிகிறது. இது போன்ற கவிதைகள் ஓர் இளம் பெண் எழுதியது என்று நம்புவது மிகவும் கடினம்." என்கிறார்.

சிங்சோவ் நன்கு வெளியே அறியப்படத் தொடங்கினாள். இலக்கியம், தத்துவம், அரசியல் பற்றி விவாதிப்பதற்காக, பல எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் அவளை நேரில் வந்து சந்தித்தனர்.
விருந்தினர்களை அன்புடன் வரவேற்று இலக்கியம், அரசியல் பற்றிப் சிங்சோவ் அளவளாவினாள். சில ஆண்டுகளுக்குப் பின் காதலன் மிங்செங்கையே மணந்து கொண்டாள். அவளுடைய கவிதைகளைக் கணவனிடம் காட்டினாள். அவளைக் கண்டு ஏளனமாக அவன் சிரித்தான். பிறகு அவளது ஆர்வத்தைப் பாராட்டி இருவரும் கவிதைகளைப் உரையாடத் தொடங்கினார்கள். சில சமயங்களில் உறங்கச் செல்வது முதல் விடியற்காலை வானம் ஒளிரும் வரை பேசித் தீர்த்தனர்.
வரலாற்றை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கினாள். இந்த உத்வேகம் அவளது கவிதைகளுக்கான தனித்துவமான பாணியை வளர்க்க உதவியது என்பதை உணர்ந்தாள். நாள்தோறும் மிங்செங் அவளுக்குக் கதைகள் சொன்னான். கிழக்கு மலைப் பகுதியில் உள்ள ஓர் அழகான கல்லைப் பற்றிய கதை ஒன்றையும் சொன்னான். ஒரு நாள், இரண்டு கடவுள்கள் ஆட்சி அதிகாரத்துக்காகச் சண்டையிட்டு வானத்தில் ஒரு துளையைப் போட்டதால் வானம் அதிர்ந்தது. ராணி கிழக்கு மலையில் உள்ள கல்லை எடுக்க முயற்சி செய்தாள்.
அந்தக் கல் திமிர் பிடித்து வர மறுத்தது ராணியைக் கல் மதிக்கவில்லையெனக் கோபமாகச் சென்றுவிட்டாள். பல ஆண்டுகளாகப் பாழடைந்த மண்டபத்தில் பரிதாபமாகக் கிடந்த அந்தக் கல் அந்த ராணியிடம் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டது. இன்னொரு கடவுள், கல்லின் நிலையை உணர்ந்து அந்தக் கல்லை ஓர் அழகிய பெண்ணாக மாற்றினார். அவள்தான் எனக்கருகில் படுத்திருக்கிறாள் என்று மிங்செங் சொன்னதும் சிங்சோவ் மகிழ்ந்து, அவர்களது காதல் மேலும் தீவிரமாக வளர்ந்தது, இன்னும் கூடுதல் அன்போடு காதலித்தனர்.
ஆனால் திருமணவாழ்வில் அவர்களுக்கு மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பத்து வருடங்கள் கடந்தும், அவளுக்குக் குழந்தையில்லாத நிலையில் அதையே குற்றமாக்கி தகராறுகள் பெருகத் தொடங்கியது. சண்டைகளுக்கு நடுவிலும் அவள் மீதான காதல் குறையவில்லை. புத்திசாலியான மனைவியைப் பெற்றதற்காக மிங்செங் மகிழ்ந்தான். . மக்கள் அவரைச் சிங்சோவ்வின் கணவர் என்றே அறிந்திருந்தனர். மிங்செங்குக்குத் தனி அடையாளம் இல்லை. அதையெல்லாம் மறைத்துக்கொண்டு பண்டைய வெண்கலப் பொருட்களையும், கல்வெட்டுகளின் மறுஉருவாக்கங்களையும் சேகரித்துக் கல்வெட்டுகள் குறித்த ஆய்வுகளைச் செய்தான்.

மிங்செங்கின் தாயார் இறந்தபோது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நான்ஜிங்கிற்குச் சிங்சோவ் தனியாகச் சென்றாள். தன்னோடு பதினைந்து வண்டிகள் நிறையப் புத்தகங்களை எடுத்துச் சென்றிருக்கிறாள். அதனால் வேறு எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. அங்கிருந்து திரும்பிச் சென்றபோது பத்து அறைகள் கொண்ட புத்தகங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவளுடைய உலகம் அழிந்து போவதையும், நிறைய வலியும் மகிழ்ச்சியின்மையும் தன் முன்னால் காத்திருப்பதையும் அவளால் பார்க்க முடிந்தது. மிங்செங் மனைவியை உதாசீணப்படுத்தினான், அவளைச் சந்திப்பதைத் தவிர்க்கத் தொடங்கினான். அவளால் பொறுக்க முடியாமல் கடிதம் ஒன்றை எழுதினாள்.
மிங்செங்கின் தந்தை தனது மேஜையில் இருந்த கடிதத்தைப் பார்த்தார். அக்கடிதம் அவரது மருமகளால் எழுதப்பட்டது. கடிதத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தார். அன்புள்ள மாமனார் எனத் தொடங்கிய கடிதம்: "உங்கள் மகள் என்ற முறையில், அரசியல் விவகாரங்களில், குறிப்பாக ஒரு பெண்ணாக நான் உங்களிடம் கருத்துத் தெரிவிப்பது முறையற்றது என்று எனக்குத் தெரியும். ஆனால் என் தந்தை சம்பந்தப்பட்டதால், நான் என்னுடைய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்” என்பதில் தொடங்கித் தனது பிரச்சனைகளைக் கடிதமாக எழுதுகிறார். ஒரு பெண் எப்படித் தன்னுடைய அரசாட்சியைப் பற்றிக் கருத்துச் சொல்லமுடியுமெனக் கடிதத்தைக் கிழித்து விட்டு, தன் குடும்பத்திற்கும் அவளுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லையென அவருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துவிதமான சலுகைகளையும் தடைசெய்தார்.
பிறகு மிங் நலம் குன்றிப் படுத்த படுக்கையாகி விட்டான்.. அவனைச் சந்தித்து அப்படியொரு கடிதம் எழுதியதற்காகச் சிங்சோவ் வருந்துகிறாள். தனது அரசியல் கருத்தினைச் சொன்னதற்கு மிங்கிடம் தனது வருத்தத்தைத் தெரிவிக்கிறாள். மிங் கடைசியில் தான் இறந்தபின் அவளை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வலியுறுத்தி, ஒரு பெண் எவ்வளவு பிரபலமடைந்திருக்கிறாள் என இந்த உலகம் அறிய வேண்டுமெனச் சொல்கிறான். அவளது மடியில் தலையைச் சாய்த்தபடி கடைசியில் இறந்து போகிறான்.

பெண்குழந்தையாக அறையில் இருந்தோம்.
நாங்கள் நகைகளை அணிந்தோம்,
எங்கள் கூந்தலில் வைரங்களை அணிந்தோம்,
எங்கள் கழுத்தில் தங்க நெக்லஸை அணிந்தோம்,
ஒவ்வொரு பெண்ணையும் கவனமாக உருவாக்கினோம்.
இப்போது வயதாகிச் சோர்வாக இருக்கிறேன்.
எனது கூந்தலை அலங்கரிப்பதில் அக்கறையில்லை.
நான் திரைச்சீலைக்குப் பின்னால்
சன்னலுக்கருகில் ஒளிந்துகொண்டு
கடந்து செல்லும் மற்றவர்களின் சிரிப்பு
காதுகளில் எதிரொலிப்பதைக்
கேட்கவே விரும்புகிறேன்.
என்று எழுதி அவள் முதுமையை உணர்ந்தாள். கவிதைகளுக்காகச் செலவிட்ட பொழுதுகளை எண்ணி அந்த வயதில் நிம்மதியடைந்தாள். அவள் தன் கடந்தகாலப் புகழ், திருமணம், துரோகம், காதல் என அனைத்தையும் நினைத்து தான் செய்த தவறு என்னவென்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். முதுமையில் மனம் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருப்பதாகக் பகிர்ந்துகொண்டிருக்கிறாள்.

கி.பி 1155 ஆம் ஆண்டு அவள் இறந்தபோது அவளுக்குச் சுமார் எழுபது வயது. மரணத்திற்குப் பின் அவரது கவிதைகள் பிற்காலத்தில் அறிஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பெண் என்ற காரணத்தால் முறையான கல்வி கற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டவளுக்கு 'ஆயிரம் ஆண்டுகளில் முதல் பெண் கவிஞர்' என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தனர். பிறகு அவளுடைய கவிதைகள் முறையாகத் தொகுக்கப்பட்டன, அதில் பல கவிதைகள் காணாமல் போயிருந்தாலும், கிடைத்தவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட்டனர். லி சிங்சோவ் சுமார் நூறு கவிதைகளை மட்டுமே விட்டுச் சென்றுள்ளார். எல்லா வகையிலும் சிறந்த எழுத்தாளர், இருப்பினும், குறிப்பாக இலக்கணம் படித்த ஆண்கள் மட்டுமே நாள்தோறும் வேலையின் ஒரு பகுதியாகக் கவிதை எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு காலத்தில் லி சிங்சோவ் எழுதினார் என்பது பெருமைக்குரியது.
· சொற்கள் மிதக்கும்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...