"திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறுகிறதா?" - எல்.முருகன் விமர்சனம் குறித்து திருமாவளவன் பளீச்
'திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பாஜக முயல்கிறது' என்று விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
"திமுக கூட்டணி சலசலத்து போயிருக்கிறது. வேறு கூட்டணிக்குச் செல்லலாமா என்ற தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் திருமாவளவனின் பேச்சு உள்ளது" என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேற வாய்ப்பே இல்லை.
எங்கள் கூட்டணியைச் சிதறடிக்க முடியாததால் வாய்க்கு வந்ததை பாஜகவினர் பேசுகின்றனர்" என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து, ஆர்.சி.பி வெற்றி விழாவில் ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்துப் பேசிய அவர், "அரசு எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் கூட இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கவே செய்கின்றன. அரசு மேலும் கூடுதல் கவனம் செலுத்தி கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.