வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு சேதம்: விசாரணைக்கு உத்தரவு
கர்நாடகா: 'அலைச்சல் இல்லை; வரிசையில் நிற்க வேண்டாம்' - கவனம் பெறும் இல்லம் தேடி மருத்துவம் திட்டம்!
அடித்தட்டு மக்களுக்கும் மருத்துவம் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கும் விதமாக இலவச வெளிநோயாளர் பிரிவு (OPD) சேவைகளைத் தொடங்கவிருக்கிறது கர்நாடகா சுகாதாரத் துறை.
முதன்முறையாக சி.வி. ராமன் நகர் பொது மருத்துவமனையில் இருந்து தொடங்கப்படுகிறது இந்தத் திட்டம். முதற்கட்டமாக புற்றுநோய் நோயாளிகள், முதியவர்கள், மூளை ரத்தக்கசிவு மற்றும் இதய பிரச்னைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பவர்களுக்கு இந்த வகையில் சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது.
இதுபோன்ற தீவிர பிரச்னைகளால் அவதிப்படும் எளிய மக்கள் மருத்துவ வசதிகளை அணுகுவது சவாலானதாக இருக்கும் என்பதை உணர்ந்து, OPD சேவைகளை வீட்டிலேயே வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.
இதனால் கடுமையான நோயுடன் பல கிலோமீட்டர்கள் பயணிக்கவோ, வரிசையில் நிற்கவோ தேவையில்லை. ஒரு மொபைல் மருத்துவமனை மாதிரியின் மூலம் மருத்துவர்கள் வீடுதேடி வந்து தொடர் பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சைகளை வழங்குவார்கள்.
முதல்படியாக சி.வி. ராமன் நகரைச் சுற்றிய 5 இடங்களில் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. அடுத்தடுத்த மாதங்களில் இந்த இடங்கள் விரிவாக்கம் செய்யப்படும். என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த திட்டத்தை பெங்களூரு மூழுவதும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கர்நாடக சுகாதாரத்துறை இந்த புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக புகழப்படுகின்றனர்.