நீதித் துறையின் மறுஆய்வு அதிகாரம்: அரிதாகவே பயன்படுத்த வேண்டும் -தலைமை நீதிபதி ப...
ஈரோடு: "பயிர்களுக்கு இடையே முளைக்கும் களைதான் அதிமுக" - ஸ்டாலின் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பில் இரண்டு நாள் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை தொடங்கியது.
இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசுகையில், "தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதல் வேலையாக வேளாண்மைத் துறை என்று சொல்லாமல், உழவர் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்காக வேளாண்மை-உழவர் நலத்துறை என்று பெயரை மாற்றினோம்.
அதோடு மட்டும் நிற்காமல் பெயருக்கேற்ப உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களையும் வகுத்துச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். அதனால்தான், தமிழ்நாட்டு வரலாற்றில், முதல்முறையாக வேளாண்துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதுவரை வேளாண்மைத் துறைக்கென ஐந்து முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளோம்.

கடந்த நான்கு ஆண்டுகளில், உணவு தானிய உற்பத்தியில் 458 லட்சம் மெட்ரிக் டன் எட்டியுள்ளோம். 2020-21-ஆம் ஆண்டில் ஹெக்டேருக்கு 2 ஆயிரத்து 235 கிலோவாக இருந்த உணவு தானிய பயிர்களின் உற்பத்தித் திறன் 2024-25-ஆம் ஆண்டில், 2 ஆயிரத்து 871 கிலோவாக அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டு, இதுவரை 1 இலட்சத்து 84 ஆயிரம் இணைப்புகள் ரூ. 2,184 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரத்திற்கு மட்டும் இதுவரை மொத்தம் ரூ.26,223 கோடி செலவிடப்பட்டுள்ளது. நகரங்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிராமமும் அதற்கு இணையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைத்து மொத்தம் இருக்கும் 12,525 கிராம ஊராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தோளில் பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகள்போல் போலி வேஷம் போடுபவர்கள் நாங்கள் கிடையாது. விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை வந்தால், முதல் ஆளாக நான் வந்து நிற்பேன்.
உழவு என்பது தொழில் மட்டுமல்ல; அது நம்முடைய பண்பாடு. நிலத்தை ஐந்திணையாகப் பிரித்து வாழ்வியல் வகுத்த இனம் தமிழினம். அந்த நிலத்தை எல்லா வகையிலும் நாம் வளப்படுத்தி உயர்த்த வேண்டும்.
வளமான நிலங்களிலும், பயிர்களுக்கு நடுவில் களைகள் முளைக்கும். அப்படிப்பட்ட களையாகத்தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்குத் துரோகம் செய்தது அ.தி.மு.க. ஆட்சி.
ஒவ்வொரு விஷயத்திற்கும் விவசாயிகள் எப்படியெல்லாம் போராடினார்கள். ஆனால், இன்றைக்கு அந்த நிலைமை மாறியிருக்கிறது.

கடந்த ஆட்சியில், விவசாயிகளின் தற்கொலை அதிகமானது. உழவர்களின் உரிமையைப் பறிக்க முயன்ற மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் வெயிலிலும், மழையிலும் விவசாயிகள் போராடி அடக்குமுறையை எதிர்கொண்டபோது, கூச்சமே இல்லாமல் அந்தச் சட்டங்களை ஆதரித்துப் பேசி, பச்சைத் துரோகம் செய்தது அ.தி.மு.க.
அதனால்தான் அ.தி.மு.க.வை விவசாயிகள் தோற்கடித்தார்கள். அதுபோன்ற களைகள், நாட்டிலிருந்து மொத்தமாகக் களையப்பட வேண்டும். உழவர் பெருங்குடி மக்களான உங்களுக்கு இன்னும் பல திட்டங்கள் 2.0 திராவிட மாடல் ஆட்சியில் வர இருக்கிறது என்றார்.