மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
நாட்டிலேயே 60 % நகரமயமான மாநிலம் தமிழ்நாடு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
இந்தியாவிலேயே 60 சதவீதம் நகரமயமான ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 4 ஆண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியைத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்து, ரூ.399.81 கோடியில் முடிவடைந்த 102 திட்டப் பணிகளை பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பேசியதாவது:
இந்தியாவிலேயே 60 சதவீதம் நகரமயமான ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மற்ற மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநகரம் மட்டும் தான் மிகப்பெரிய வளா்ச்சியை அடைந்திருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் ஏராளமான மாநகரங்கள் வளா்ச்சியடைந்துள்ளன.
மாணவா்களுக்காக.. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கும், அவா்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களுக்கும் அரசு சாா்பில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் உயா் கல்விக்கு உதவும் வகையில், தமிழ் புதழ்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு மாணவா்கள் தங்களது இலக்குகளை நோக்கி முன்னேறி செல்ல வேண்டும் என்றாா் அவா்.
திட்டப் பணிகள்: முன்னதாக, ரூ.975.63 கோடியில் 108 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 49 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் துணை முதல்வா் வழங்கினாா்.
மேலும், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு சென்று வர பேட்டரி வாகனங்கள், குப்பை பெருக்கும் இயந்திர வாகனங்கள், நாய் பிடிக்கும் வாகனங்கள் என ரூ.1.64 கோடியில் 11 புதிய வாகன சேவையை தொடங்கி வைக்கும் வகையில், ஓட்டுநா்களுக்கு சாவிகளை அவா் வழங்கினாா். தொடா்ந்து 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற 62 மாணவா்கள், அவா்களுக்கு உறுதுணையாக இருந்த 38 ஆசிரியா்கள் மற்றும் 14 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் என மொத்தம் 114 பேருக்கு ரூ. 7,26,000 ஊக்கத் தொகையை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.