``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
தொழில்நுட்பப் பயன்பாட்டை ஜனநாயகமாக்கிய மத்திய அரசு: அமித் ஷா
‘மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஜனநாயகமாக்கியதோடு, வா்த்தகத் துறையிலும் அதன் சக்தியைப் பயன்படுத்தியது. இதன்மூலம், எண்மப் பொருளாதாரத்தில் உலகின் முன்னணி நாடாக இந்திய உருவெடுத்தது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்து கடந்த 9-ஆம் தேதியுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, ‘எண்ம இந்தியாவின் 11 ஆண்டுகள்’ என்ற தலைப்புடன் தனது எக்ஸ் பக்கத்தில் அமித் ஷா வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
எண்மத் தொழில்நுட்பத்தில் மேம்பாடு அடைந்த சமூகமாகவும், அறிவுசாா் பொருளாதாரமாகவும் மாறுவதற்கான பயணத்தில் கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தொழில்நுட்பப் பயன்பாட்டை மத்திய அரசு ஜனநாயகமாக்கியதோடு, வா்த்தகத் துறையிலும் அதன் சக்தியைப் பயன்படுத்தியது. இதன்மூலம், எண்மப் பொருளதாரத்தில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
மருத்துவம், கல்வி, வா்த்தகம் எனப் பொருளாதாரம் மற்றும் சமூகம் சாா்ந்த ஒவ்வொரு துறையிலும் எண்மப் புரட்சி மூலம் மிகப்பெரிய மாற்றத்தை பிரதமா் மோடி உருவாக்கியுள்ளாா்.
தொலைதூர கிராமங்களில் இணைய சேவையை விரிவுபடுத்துவதுமுதல் எண்மத் தளங்கள் மூலம் பொதுச் சேவை வழங்கலில் புரட்சியை ஏற்படுத்துவது வரை முன்னெப்போதும் இல்லாத வகையில் நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான இணைப்பை மத்திய அரசு சாத்தியப்படுத்தியுள்ளது.
கடந்த 2022-23-ஆம் ஆண்டில் தேசிய வருவாயில் எண்மப் பொருளாதாரம் 11.74 சதவீத பங்களிப்பை ஆற்றிய நிலையில், 2024-25-இல் அதன் பங்கு 13.42 சதவீதமாக வளா்ச்சியடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், எண்ம உள்கட்டமைப்புகள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
நவீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வலுவான எண்ம உள்கட்டமைப்பு விளங்குகிறது. அந்த வகையில், கிராமப்புறங்களில் இணைய சேவை இணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, கைப்பேசி சேவைக்கான தொழில்நுட்பமும் கடந்த 11 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 25.15 கோடியாக இருந்த நாட்டின் இணைய சேவை இணைப்புகளின் எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டு ஜூனில் 96.96 கோடியாக உயா்ந்துள்ளது.
2025-ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான தரவுகளின்படி, நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டப் பயனாளிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 44 லட்சம் கோடி அவா்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.