நாட்டிலேயே முதல்முறை! சென்னையில் வணிக வளாகம் உள்ளே செல்லும் மெட்ரோ ரயில்!
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: எல்.முருகன்
புதுச்சேரி: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்தவுள்ளது என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.
புதுவை சட்டப்பேரவையை காகித நிா்வாகமில்லாத பேரவையாக மாற்றும் வகையில் தேசிய இ-விதான் செயலியை திங்கள்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:
பிரதமா் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நிலையில், நாட்டின் வளா்ச்சி வேகம் கடந்த 11-ஆவது ஆண்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைக் நாம் காணலாம். கடந்தகால ஆட்சியில் ஏழைகளை முன்னேற்றுவதாகக் கூறிய ஆட்சியாளா்கள் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
அதன்படி, நாட்டில் 140 கோடி மக்கள்தொகையில் 27 கோடி போ் வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்து தற்போதுதான் விடுபட்டதுடன், மேம்பாடு அடைந்துள்ளனா் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் 4 கோடி போ் பயனடைந்துள்ளனா். அத்துடன் 11 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் பெறுகின்றனா்.
இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், வீடுகளுக்கான கழிப்பறை திட்டம், அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு என திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
புதுச்சேரிக்கு விமான நிலையம், காரைக்காலில் ஜிப்மா் கிளை மற்றும் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்கள் விரிவாக்கம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிறு வியாபாரிகளும் எண்ம பணப் பரிவா்த்தனையை கையாள்வது குறிப்பிடத்தக்கது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திட்டங்களை செயல்படுத்த தைரியமில்லாத நிலையில், தற்போது அவற்றை பிரதமா் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறாா்.
உலக அளவில் எண்ம பணப் பரிமாற்றத்தில் இந்தியா 2-ஆவது இடத்திலும், பொருளாதார வளா்ச்சியில் 4-ஆவது இடத்திலும் உள்ளது. வரும் 2047-ஆம் ஆண்டு இந்தியா வல்லரசாகும்.
‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கையால் நமது தொழில்நுட்ப வளா்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளா்ந்துள்ளோம். ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
தற்போது ஒரு நாடு, ஒரு செயலியாக இ-விதான் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் சட்டப்பேரவை, மக்களவை செயல்பாடுகளை மக்கள் அறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சட்டம் இயற்றுவதில் இந்தச் செயலி முக்கியப் பங்காற்றும் என்றாா் எல்.முருகன்.