ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாகும் மாட்டிறைச்சி: அஸ்ஸாம் முதல்வா் குற்றச்சாட்டு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பூரன் ஓய்வு!
மேற்கிந்தியத் தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்டருமான பூரன், 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், தொடர்ந்து ஐபிஎல், சிபிஎல், எம்எல்சி போன்ற லீக் தொடர்களில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு முதல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடி வரும் பூரன், 61 ஒருநாள் போட்டிகளில் 1,983 ரன்களும் 106 டி20 போட்டிகளில் 2,275 ரன்களும் குவித்துள்ளார்.
ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பூரன்,
”நீண்ட யோசனைக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க முடிவு செய்துள்ளேன். நான் விரும்பும் இந்த விளையாட்டு நிறைய கொடுத்துள்ளது, தொடர்ந்து கொடுக்கும். மகிழ்ச்சி, நோக்கம், மறக்க முடியாத நினைவுகள் மற்றும் மேற்கிந்திய தீவுகள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு. அந்த மெரூன் நிறத்தை அணிந்துகொள்வது, தேசிய கீதத்திற்காக நிற்பது, நான் ஒவ்வொரு முறையும் மைதானத்தில் கால் பதிக்கும் போது எனக்கு அனைத்தையும் கொடுத்தது. அணியை கேப்டனாக வழிநடத்தியது நான் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருப்பேன். அசைக்க முடியாத அன்பை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி.
எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த சர்வதேச அத்தியாயம் முடிவடைந்தாலும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் மீதான எனது காதல் ஒருபோதும் மங்காது.” எனப் பதிவிட்டுள்ளார்.
சமீப ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, பல்வேறு நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சில நாள்களுக்கு முன்னதாக, தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பா் - பேட்டா் ஹென்ரிச் கிளாசென் சர்வதேச போட்டிகளில் இருந்து இளம் வயதில் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.