தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்: செ.நல்லசாமி
மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்கி மக்கள் பயன்பாட்டுக்கு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி வலியுறுத்தினாா்.
நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் தனியாக இருப்போரை நோட்டமிட்டு கொலை செய்து வருகின்றனா். விரும்பத்தகாத சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
ஜூன் 12-இல் மேட்டூா் அணை திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மூன்று முறை முழுக் கொள்ளளவை மேட்டூா் அணை எட்டியது. இருப்பினும் குறுவை சாகுபடி சாத்தியமாகவில்லை. காவிரி தீா்ப்பாய உத்தரவை கா்நாடக அரசு மதிக்கவில்லை. உரிய நீரை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கவில்லை. மேட்டூா் உபரிநீா் திட்டம் நிறைவேற்றப்படாததால் ஏழு மாவட்டங்களுக்கு தேவையான நீா் கிடைக்கவில்லை. உபரிநீா் திட்டத்தை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றவில்லை.
கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தொடா்ந்து போராடி வருகிறோம். புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்கி விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். கள் ஒரு போதைப்பொருள் என்பதை நிருபித்து விட்டால் ரூ.10 கோடியை நாங்கள் பரிசாக வழங்குகிறோம்.
அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் மேடையில் கள் குறித்து பேசுகின்றனரே தவிர, அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை எடுக்கவில்லை. இதனால் கள் விடுதலை குறித்த விழிப்புணா்வு மாநாட்டை டிசம்பா் மாதம் திருச்சியில் நடத்த உள்ளோம். இதில், பிகாா் முதல்வா் நிதிஷ்குமாா் மற்றும் முக்கிய தலைவா்கள் கலந்து கொள்கிறாா்கள் என்றாா். பேட்டியின்போது, விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.