குஜராத் விமான விபத்து! பிரிட்டன், போர்ச்சுகல், கனடா அமைச்சர்களுடன் மத்திய அமைச்ச...
திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?
திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.
இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் சரிபுல் பெண் ஒருவரைக் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அது பற்றி விசாரித்த போது சரிபுல் காதலித்த பெண் டாக்டர் திபாகர் சாஹா என்பவரின் மாமா மகள் என்று தெரிய வந்தது.

அதோடு திபாகரும் சரிபுல் காதலித்த அதே பெண்ணைக் காதலித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து திபாகரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், சரிபுலைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இக்கொலை தொடர்பாக டாக்டர் திபாகர், அவரது பெற்றோர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ''சரிபுலிடம் பரிசு ஒன்று கொடுப்பதாகக் கூறி திபாகர் ஜாய்தீப் என்பவரது வீட்டிற்கு வரவழைத்தார்.
திபாகர், அவருடன் இருந்த அனிமேஷ், நபனிதா ஆகியோருடன் சேர்ந்து சரிபுலைக் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து புதிதாக வாங்கப்பட்ட டிராலி பேக்கில் சரிபுல் உடலை வைத்தனர்.
அடுத்த நாள் காலையில் திபாகர் பெற்றோர் வந்து உடல் இருந்த டிராலி பேக்கை எடுத்துச்சென்றனர். அவர்கள் தங்களது கடையிலிருந்த ஐஸ் கிரீம் குளிர்சாதனப் பெட்டியில் உடலை மறைத்து வைத்தனர்.
குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

முக்கோண காதல்
மூன்று பேரும் மொபைல் போனில் மெசேஜ் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் போலீஸார் தெரிவித்தனர். சரிபுல் காதலித்த பெண்ணின் தந்தை சமீபத்தில் இறந்து போனார். ஆனால் அப்பெண்ணிற்கு சரிபுல் துணையாக இருந்தார்.
எனவே சரிபுலைக் கொலை செய்தால்தான் தன் பக்கம் அப்பெண் வருவார் என்று கருதி மருத்துவர் திபாகர் இக்கொலையைத் திட்டமிட்டுச் செய்துள்ளார்.