Los Angeles riots: படைகளை அனுப்பிய ட்ரம்ப்; `அரசியலமைப்பை மீறும் செயல்' -கலிபோர்னியா ஆளுநர் வழக்கு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அப்போது இருந்து இப்போது வரை, அவர் கொண்டுவந்திருக்கும் பல சட்டங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளன. ஆனால், முதன்முதலாக பூதாகரமாக வெடித்த சர்ச்சை, 'ஆவணம் செய்யப்படாமல் அமெரிக்காவில் குடியேறியவர்களை முறையில்லாமல் வெளியேற்றியது' ஆகும்.
இப்போது இவர்களை வெளியேற்றுவதில் ட்ரம்ப் மேற்கொண்டுள்ள ஒரு நடவடிக்கை அமெரிக்காவிற்குள்ளேயே பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது?
அமெரிக்காவில் ஆவணம் செய்யாமல் குடியேறி இருப்பவர்களை வெளியேற்ற ட்ரம்ப் அரசு ரெய்டுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் 40 பேருக்கும் மேல் கைது செய்யப்பட, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 6), அந்த மாகாணத்தில் மக்கள் அமைதி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்தப் போராட்டம் இப்போது ட்ரம்பின் பெடரல் படைகளுடன் மோதல் மற்றும் கைதுகளில் வந்து நிற்கிறது.
இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதில் இருந்து தடுக்கவும், ஆவணம் செய்யப்படாமல் அமெரிக்காவில் குடியேறி இருக்கும் மக்களை வெளியேற்றுவதில் பெடரல் அதிகாரிகளுக்கு உதவவும் ட்ரம்ப் 2,000 தேசிய பாதுகாப்பு படை வீரர்களையும், 700 கடற்படையினரையும் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு அனுப்பியுள்ளார்.
இதில் என்ன பிரச்னை?
1965-ம் ஆண்டிற்கு பிறகு, அந்த மாகாணத்தின் ஆளுநரின் கோரிக்கை இல்லாமல், பெடரல் படையை அந்த மாகாணத்திற்குள் அனுப்புவது இதுவே முதல் முறை.
'இது அரசியலமைப்பை மீறும் செயல்' என்று கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் மற்றும் அட்டர்னி ஜெனரல் ராப் போண்டா வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். மேலும், 'இது தேவையில்லாத செயல்' என்றும் கூறியிருக்கிறார்கள்.
ட்ரம்பின் இந்த செயல் பெடரல் மற்றும் மாகாண அதிகாரிகள் இடையே பிரச்னையை உருவாக்கும் என்றும், இது அந்த மாகாணத்தில் தேவையில்லாத பிரச்னையை உருவாக்கும் என்றும் அந்த நாட்டு அரசியல் விமர்சகர்கள் கூறியிருக்கின்றனர்.