கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்காதது ஏன்? மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்கம்
சென்னை: கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த ஆய்வு முடிவுகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே அங்கீகரிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.
கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் தமிழக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்த நிலையில், கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் ஷெகாவத், சென்னையில் இன்று செய்தியாளர்களிடையே விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசுகையில், அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வந்தபிறகே அங்கீகரிக்க முடியும். இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அயோத்தி ஆய்வை மட்டும் மத்திய அரசு உடனே அங்கீகரித்தது ஏன்? எப்படி? என்றும், தமிழகத்தின் தொன்மையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தொடர்ந்து மறுக்கிறதே என்றும் வரலாற்றுப் பேராசிரியர்களும், தமிழக ஆய்வாளர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அயோத்தியில் அறிவியல்பூர்வமான எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்பதை நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.