வேலூர்: ஜிம் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் - மீண்டும் கைதான பிரபல ரௌடி `வசூர்’ ராஜா
வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூரைச் சேர்ந்த பிரபல ரௌடி `வசூர்’ ராஜா. இவன்மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 54 குற்ற வழக்குகள் இருக்கின்றன. 9 முறை குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக, வேலூர் மாவட்ட போலீஸாரின் க்ரைம் ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் வசூர் ராஜா, சமீபத்தில்தான் நிபந்தனை ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தான்.
தினமும் காலை, சத்துவாச்சாரி காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வந்தான். எஸ்.பி தனிப்படை போலீஸாரும், அவனின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் திடீரென வேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று திருந்தி வாழ நினைப்பதாகக் கூறி உத்திரவாத பத்திரத்தையும் தாக்கல் செய்தான் வசூர் ராஜா.

இந்த நிலையில், ஜிம் உரிமையாளர் ஒருவரிடம் ரூ.2 லட்சம் மாமூல் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்து மீண்டும் பீதியை கிளப்பியிருக்கிறான் வசூர் ராஜா. வேலூர் கொணவட்டம் பகுதியில் ஜிம் வைத்திருக்கும் ரசாக் என்பவர்தான் மிரட்டப்பட்டவர். இது தொடர்பான ரெக்கார்டிங் ஆடியோக்களுடன் வேலூர் வடக்கு காவல் நிலையம் சென்று உடனடியாக புகாரளித்திருக்கிறார் ரசாக்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீஸார், ரௌடி வசூர் ராஜா மற்றும் அவனின் கூட்டாளிகள் ஆசிப், முனீர், வெங்கடேசன், மஞ்சுநாதன் ஆகிய 5 பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு வசூர் ராஜா உட்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.