தூத்துக்குடி: 800 போதை ஊசி குப்பிகள் பறிமுதல்; இருவர் கைது; போதை நகரமாகிறதா முத்து நகர்?
தூத்துக்குடியில் போதைப் பழக்கம் இளம் சிறார்கள் மத்தியில் சமீபகாலமாகப் பெருகிவருகிறது. விற்பனை செய்வதும், அவற்றைப் பயன்படுத்துவதும் இளம் சிறார்களாக இருப்பதால் போலீஸாரின் பிடிக்குள் சிக்குவதில்லை.
இதன் காரணமாகக் குற்றச்சம்பவங்களும் நடக்கின்றன. இது தாளமுத்துநகர் மற்றும் வடக்கு காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பான்மையாக நடந்து வருகிறது.
தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் தலைமையிலான போலீஸார், தாளமுத்துநகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட மொட்டை கோபுரம் கடற்கரைப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

ஒரே பைக்கில் வந்த இருவரை நிறுத்தி அவர்களிடம் சோதனை செய்தனர். சோதனையில் தாளமுத்துநகர் சமர்வியாஸ் நகரைச் சேர்ந்த செல்வகுமார் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ரஹீம் ஆகியோர் என்பது தெரிய வந்தது.
அவர்கள் போதை ஊசிகளை மருந்து சீட்டு இல்லாமல் வெளியூரிலிருந்து சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தது சோதனையில் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 800 போதை மருந்து குப்பிகள், ரூ.11,300/- ரொக்க பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்களிடம் பேசினோம், “தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவர் பரிந்துரையின்றி சட்ட விரோதமாகப் போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் மருந்தக கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இளம் சிறார்கள் மதுபிரியர்களாக மட்டும் இன்றி புதிய போதை பழக்க வழக்கங்களுக்குள்ளும் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் இவர்களைக் கண்டாலே தலைதெறிக்க ஓடும் அபாய நிலை தூத்துக்குடி நகருக்குள் பெருகிவருகிறது.

போலீஸாரின் ரோந்து நடவடிக்கையில் வீரியம் இல்லாததால் இதுபோன்ற தவறுகள் பயமின்றி நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. தவறு செய்து சிக்கிக் கொள்ளும் இளம் சிறார்கள் மீது தயவு தாட்சண்ணியமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகி வருகிறது.
இளம் சிறார்களுக்கு ஆசை வார்த்தை கூறி போதை ஊசி விற்பனைக்குத் தள்ளிவிட்டு பெரிய கும்பல்கள் தப்பித்துக் கொள்கின்றன.
போலீஸாரின் தீவிர கண்காணிப்பு இல்லையென்றால் போதை நகரமாக மாறிவரும் தூத்துக்குடி, கொலை நகரமாக மாறினாலும் ஆச்சரியமில்லை” என்றனர்.