Medical Courses: 'மருத்துவப் படிப்புன்னா MBBS மட்டும் இல்ல...' - வேறு என்னென்ன ப...
விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு, ஆனால் பேசவில்லை! மே டே கால் என்றால்?
குஜராத் மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத்தில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், விமானம் புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே விமானியிடமிருந்து மே டே கால் எனப்படும் அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், அழைப்பில் யாரும் பேசவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, அவசர அழைப்பு விடுக்கப்பட்டதும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அது அமைதியாகஇருந்ததாகவும், அதற்குள் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மே டே கால் என்றால், ஒரு விமானமோ, கப்பலோ ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் வகையில், அதனை இயக்குபவரால், கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும் சமிக்ஞையாகும். இது மிக ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்பதை சொல்லும் தகவலாகும். எனவே விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டதால், விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தால்தான், கடைசி நேரத்தில் என்னவானது என்பது தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக விமான விபத்து நேரிட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இரண்டு விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேருடன் லண்டன் புறப்பட்ட விமானம் வானத்தில் பறக்கத் தொடங்கும்முன்பே, 825 அடி உயரத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானம் புறப்பட்ட உடனேயே, அதன் வழித்தடத்திலிருந்து தடம்புரண்டு, குடியிருப்புப் பகுதிக்கு அருகே வினாடிக்கு 475 அடி வேகத்தில் விழுந்துள்ளது.
17 வினாடிகள் ஓடும் அந்த விடியோ, விமானம் எவ்வாறு விழுந்து நொறுங்கிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. விமானம் விழுந்த போது, வானில் கரும்புகை மேலெழும்பிய காட்சிகளும் வெளியாகியிருக்கிறது.
மே டே கால் என்பது?
விமானப் போக்குவரத்துத் துறைகளால் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசரகால அழைப்பாக இந்த மே டே கால் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மே டே கால் என்பது பிரெஞ்சு மொழியிலிருந்து அதாவது மெய்டர் என்றால் உதவி செய்யுங்கள் என்று அர்த்தமாகும். இந்த மெய்டர் என்ற வார்த்தைதான் மே டே கால் என உலகம் முழுவதும் அவசர உதவிக்கான அழைப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
என்ஜின் செயலிழப்பு, வானிலை, தொழில்நுட்பக் கோளாறுகள், மருத்துவ அவசர நிலை போன்றவற்றின்போது விமானத்தின் விமானிகள் அல்லது கப்பல் மாலுமிகளால் விடுக்கப்படுகிறது. இந்த அழைப்பு வந்ததும், கட்டுப்பாட்டு அறைகள் துரிதமாக செயல்பட்டு, நடவடிக்கை எடுக்கும்.
குடியிருப்புப் பகுதியில் விழுந்த விமானம்
20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. குடியிருப்புப் பகுதிகளில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணியும் நடைபெற்றுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 169 பேர் இந்தியர்கள் என்றும், 53 பேர் பிரிட்டீஷ் நாட்டவர் என்றும், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், ஏழு பேர் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.