தேனிலவு கொலை: மற்றொரு பெண்ணைக் கொன்று நாடகமாக திட்டமிட்டிருந்த சோனம்!
மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்த விமானம்! மருத்துவர்களின் நிலை?
குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. விமானம் விழுந்தபோது, கட்டடமும் தீப்பற்றி எரிந்ததாகவும், இதனால், அதில் இருந்த மருத்துவர்களின் நிலை குறித்து குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், இன்று பகல் 1.44 மணிக்கு தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் விமானிகள், ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்த நிலையில், இதுவரை 130 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு மேலெழும்பியது. விமானம் புறப்பட்ட வேகம் தொடரவில்லை. மேலெழும்பவே விமானம் முடியாமல் வளைந்து, வேகமாக கீழே இறங்கியது. சற்று வினாடிக்கெல்லாம் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த விமானம் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்த நிலையில், விமானம் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்ததும், விமானம் விழுந்த நேரத்தில், அந்தக் கட்டடம் முழுக்க தீப்பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது.
மருத்துவர்களின் விடுதி மீது விழுந்த விமானத்தால் விடுதி கட்டடத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. விமானம் கட்டடத்தின் மீது விழுந்தபோது, மருத்துவர்கள் விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான விமானம் மருத்துவர்கள் விடுதி மீது விழுந்ததால், அதிலிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நிலை என்னவானது என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
மருத்துவ மாணவர் விடுதிக் கட்டடடப் பகுதியும் தீப்பிடித்து எரிவது பதிவான நிலையில், மருத்துவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.