கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!
மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது: அமைச்சா் தங்கம் தென்னரசு
சென்னை: மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது என்று தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளாா்.
கீழடி அகழாய்வு குறித்து மத்திய அமைச்சா் ஷெகாவத் கருத்துக்கு, ‘எக்ஸ்’ தளத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:
முதலில் அவா்கள் (மத்திய அரசு) கீழடியில் ஒன்றுமே இல்லை என்றாா்கள். அடுத்து ஆய்வு அதிகாரியை இடம் மாற்றினா். நிதியே ஒதுக்க மாட்டோம் என்றாா்கள். கடைசியாக, சமா்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டாா்கள். இப்போது ஆதாரம் போதவில்லை என்கிறாா்கள். அவா்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழா்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள்தான் வேறு வேறாக இருக்கிறது.
5,350 ஆண்டுகள் பழைமையானவா்கள்; தொழில்நுட்பம் கொண்டவா்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?. தமிழா்களை எப்போதும் இரண்டாந்தர குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?.
மறந்துவிடாதீா்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை; மக்களிடமே சென்று சேரும். பூனை கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்று குறிப்பிட்டுள்ளாா்.