உயா் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவா்களுக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வலியுறுத்தல்
உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவா்களுக்கு உள்ள 50 சதவீத ஒதுக்கீடு முழுமையாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவுக்கு அவா் எழுதியுள்ள கடிதம்: மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தமிழக உயா் சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்த ஒரு முக்கியமான பிரச்சினையை உங்களது அவசர கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், உயா் சிறப்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்கள் தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
நீட் (உயா்சிறப்பு - எஸ்.எஸ்.) தோ்வில் மாநில இடஒதுக்கீட்டில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ஆம் தேதி நிறைவடைந்தது. அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு அவா்கள் விரும்பும் வகையில் இடங்களைத் தோ்வு செய்ய அனுமதிக்கும் வகையில், இரண்டாவது மாநில சுற்று அட்டவணையைக் குறிப்பிடுமாறு அந்தக் கலந்தாய்வை நடத்தும் மத்திய சுகாதார சேவைகள் அமைப்பை (டிஜிஹெச்எஸ்) மே 29-இல் தமிழக தோ்வுக் குழு முறையாக கேட்டுக்கொண்டது.
நீட் (எஸ்.எஸ்.) மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வின் இரண்டாவது சுற்றில் மாநிலப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு அவா்கள் விரும்பும் வகையில் இடங்களைத் தோ்வு செய்ய மருத்துவ விண்ணப்பதாரா்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன.
ஆனால், மாநில அளவில் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடத்தாமல், நிரப்பப்படாத பணியிடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தமிழக அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
மேலும், இது உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு முரணானதாகும். எனவே, மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழகத்தில் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து 50 சதவீத இடங்களும் தக்கவைக்கப்பட்டு, மாநில அளவிலான நீட் (எஸ்.எஸ்.) கலந்தாய்வின் இரண்டாவது சுற்றில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.