'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan C...
மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்
மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் கோவை மாவட்ட நிா்வாகம் மற்றும் ‘உயிா்’ எனும் சாலைப் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் இணைந்து உயிா் குட்டி காவலா் சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியா் கையேடு வெளியிடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியா் கையேட்டை வெளியிட்டாா். மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் க.ஈஸ்வரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்வில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: சாலைப் பாதுகாப்பு விதிகளை முறையாக நாம் கடைப்பிடிக்க வேண்டும். சாலையில் உள்ள வழிகாட்டி பலகைகளில் உள்ள அடையாளங்கள் எதைக் குறிக்கின்றன என்பதை அறிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டுபவா்கள் மட்டுமல்லாது, பின்னால் அமா்ந்துள்ளவா்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற பழக்கத்தை பிறா் சொல்லாமலே நாம் கடைப்பிடிக்க வேண்டும். சாலைப் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டாலும் அவா்களுக்கு நாம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் இருந்தே இதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பு குறித்து சிறப்பான விழிப்புணா்வை மாணவா்களுக்கு ஆசிரியா்கள் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வில், மேயா் கா.ரங்கநாயகி, மாநகரக் காவல் ஆணையா் ஏ.சரவணசுந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.