குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
'எஸ்.எஸ் வாசன் விருதினை அவருடைய பேரன் கையால் வாங்குவது பெருமையாக இருக்கிறது!' - எஸ்.பி.முத்துராமன்
திரைக்கலைஞர்களின் திறமைக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவர்களுக்கு வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டுக்கான விருது விழா வெகுவிமர்சையாக நடந்தது. விகடனின் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் பெயரில் திரையுலகில் சாதித்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் எஸ்.எஸ்.வாசன் வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை விகடன் நிர்வாக இயக்குநர், சீனிவாசனுடன் இணைந்து இயக்குநர்கள் மாரி செல்வராஜ், பாண்டிராஜ், லிங்குசாமி ஆகியோர் வழங்கினர்.
விருது வழங்கி விகடன் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில் , “இதுவரை நடந்த எல்லா ஆனந்த விகடன் சினிமா விருது நிகழ்விற்கும் எஸ்.பி.முத்துராமன் மாலை 6 மணிக்கு வந்து நிகழ்வு முடியும் வரை இருந்துவிட்டு தான் செல்வார். அவருக்கு இந்த விருதினை வழங்குவதில் மகிழ்ச்சிக் கொள்கிறோம். இந்த விருதினை அவருக்கு உலகநாயகன் கமல் சார் தான் கொடுக்க வேண்டி இருந்தது. அவர் பிளைட்டில் வர டேட் கிடைக்காததனால், அவரால் வர இயலவில்லை. அதனால் நாங்களே இணைந்து இந்த விருதினை வழங்கி கௌரவிக்கிறோம்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் லிங்குசாமி, “எஸ்.பி முத்துராமன் சார் படங்களில் முரட்டுக்காளைப் படத்திற்கு மிகப்பெரிய கூட்டம் வரும். முரட்டுக்காளைப் படத்திற்கு தியேட்டர் வாசலில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் கூட்டம் நிரம்பி இருக்கும். முதல் முறை படம் பார்த்த பிறகு, அடுத்த முறை வசனங்களை கேட்க தியேட்டர் பின்னால் போய் நின்று கேட்பார்கள். அந்த அளவிற்கு வெற்றி படங்களைக் கொடுத்தவர் எஸ்.பி. முத்துராமன் சார். அவருக்கு நாங்கள் விருது கொடுத்ததில் மகிழ்ச்சி.” என்றார்.
அதன் பிறகு பேசிய பேசிய மாரி செல்வராஜ், “சினிமாவின் முக்கியமான அடையாளம் அவர், அவருக்கு விருது வழங்க வாய்ப்பு கொடுத்த ஆனந்த விகடனுக்கு நன்றி” என்றார்.

எஸ். பி. முத்துராமன் பேசுகையில், “எஸ்.எஸ் வாசன் விருதினை அவருடைய பேரன் கையால் வாங்கிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். கமல்ஹாசன் வரவில்லை என்று சொல்கிறார்கள். கமல்ஹாசன் நான் வளர்த்த பிள்ளை. கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்தப் போதே அவர் உலக நாயனாக வருவார் என்று தீர்மானித்தேன்.
இன்று அவர் உலகம் முழுவதும் உலக நாயனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்றும் ஏ.ஐ ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மீது ஆர்வம் கொண்டு கமலஹாசன் படித்துக் கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு அவருக்கு சினிமாவின் மீது பற்று இருக்கிறது.” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.