மேட்டூர் அணையில் சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து 12ஆம் தேதி தமிழக முதல்வர் தண்ணீர் திறந்துவைக்கவிருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர், நேரில் பார்வையிட்டார்.
ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கிறார். இதனையடுத்து மேட்டூர் அணையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணையின் இடது கரை மற்றும் வலது கரை, மேட்டூர் அணை பூங்கா ஆகிய இடங்களில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வலது கரையில் விழாமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது முன்னேற்பாடு பணிகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரியிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும் மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், மேட்டூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.