சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்! ஏன்?
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
கனடாவில் வசித்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஷாஜீப் கான் என்பவர், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பொருள் உதவி செய்ய முயற்சித்ததாகவும், அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ஷாஜீப் கானை நாடு கடத்தியிருப்பதாக அமெரிக்காவின் எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காஷ் படேல் வெளியிட்ட பதிவில்,
“ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பொருள் உதவி வழங்க முயன்றதற்காகவும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முயன்றதாகவும் குற்றச்சாட்டப்பட்ட பாகிஸ்தான் குடிமகன் ஷாஜீப் கான், அமெரிக்காவுக்கு இன்று பிற்பகல் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதலின் ஓராண்டு நினைவு நாளாக அக்டோபர் 7, 2024 அன்று, கனடாவில் இருந்து நியூ யார்க்கிற்கு வந்து புரூக்ளினில் உள்ள யூத மையத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக மிகப்பெரிய துப்பாக்கிச் சூட்டை ஷாஹீப் நடத்த திட்டமிட்டார்.
அதிர்ஷடவசமாக அந்த திட்டத்தை எஃப்பிஐ முறியடித்தது. மேலும், செப்டம்பர் 4, 2024 அன்று கனடா காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அமெரிக்காவுக்கு அழைத்துவரப்பட்டு நீதியை எதிர்கொள்வார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் இருந்து அழைத்துவரப்படும் முகமது ஷாஜீப் கான் (20), ஜூன் 11 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.