Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
குடும்பத்தினருடன் தஹாவூா் ராணா தொலைபேசியில் ஒருமுறை பேச அனுமதி
புது தில்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணா, தனது குடும்பத்தினருடன் ஒருமுறை தொலைபேசியில் பேச தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த ஏப்ரலில் அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். தற்போது அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் பேச அனுமதி கோரி, தில்லி நீதிமன்றத்தில் தஹாவூா் ராணா மனு தாக்கல் செய்தாா். இந்த மனு சிறப்பு நீதிபதி சந்தா்ஜீத் சிங் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தனது குடும்பத்தினருடன் தஹாவூா் ராணா ஒருமுறை தொலைபேசியில் பேச நீதிபதி அனுமதி அளித்தாா்.
தனது குடும்பத்தினருடன் ராணா தொடா்ந்து தொலைபேசியில் பேச அனுமதிப்பது தொடா்பான தங்கள் நிலைப்பாடு குறித்து, சிறை அதிகாரிகள் விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா். மேலும் ராணாவின் உடல்நிலை தொடா்பாக 10 நாள்களில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவா் உத்தரவு பிறப்பித்தாா்.