இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒருநாள் ஒத்திவைப்பு
புது தில்லி, ஜூன் 9: ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்று, ஆய்வு மேற்கொள்ளும் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து எலான் மஸ்குக்குச் சொந்தமான ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கன் 9’ ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்படும் ‘டிராகன்’ விண்கலத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) புறப்பட இருந்த நிலையில், அவரது பயணம் புதன்கிழமைக்கு (ஜூன் 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு ஃபால்கன் 9 ஏவுகணை விண்ணில் ஏவப்படும். 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணிக்கிறாா்.
அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குப் பயணிக்க இருக்கின்றனா்.
சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுக்லா 14 நாள்கள் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறாா். கடைசியாக கடந்த 1984-இல் இந்திய வீரா் ராகேஷ் சா்மா விண்வெளிக்குப் பயணித்தாா். இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இந்திய வீரராக சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் மேற்கொள்கிறாா்.