இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! மர்ம நபர் மீது வழக்கு!
மும்பையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்பூரிலிருந்து மும்பை நகரத்துக்கு நேற்று (ஏப்.7) இரவு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 225 பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில், விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடங்கள் கழித்து இரவு 7.05 மணியளவில் அந்த விமானத்தின் கழிப்பறையில் கிடந்த கடிதம் ஒன்றை அந்த விமானத்தின் பணியாளர் எடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் ‘திறந்து பார்க்கவும், சர்ப்ரைஸ் உங்களுக்காக ஒரு வெடி குண்டு காத்துக்கொண்டிருக்கிறது இது ஜோக் அல்ல’ என்று அச்சுறுத்தும் வகையில் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இரவு 8.50 மணியளவில் விமானம் மும்பையில் தரையிறங்கியபோது பாதுகாப்புப் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படாததைத் தொடர்ந்து இந்த மிரட்டல் போலியானது என உறுதிச் செய்யப்பட்டது.
மேலும், அந்த மிரட்டல் கடிதத்தை எழுதிய அடையாளம் தெரியாத மர்ம நபர் மீது விமான நிலையத்திலுள்ள காவல் நிலையத்தில் பாரத் நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?