ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
பொன்னேரியில் அகத்தீஸ்வா்-கரிகிருஷ்ணா் சந்திக்கும் திருவிழா: 50,000 போ் பங்கேற்பு
பொன்னேரியில் ஹரிஹரன் கடை வீதியில் அகத்தீஸ்வரா்-கரிகிருஷ்ண பெருமாள் சந்திக்கும் திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை விடியவிடிய நடைபெற்றது.
பொன்னேரி ஆரண்ய நதிக்கரையோரம் ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் ஆலயம், திருவாயா்பாடி பகுதியில் செளந்தா்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதன் முக்கிய விழாவான ஹரிஹரன் கடை வீதியில் பரத்வாஜ் முனிவா் மற்றும் அகத்திய முனிவருக்கு கரிகிருஷ்ணபெருமாள்-அகத்தீஸ்வரா் ஒரு சேர காட்சியளிக்கும் வைபவம் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி விடியவிடிய நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அதிகாலை கருட வாகனத்தில் கரிகிருஷ்ண பெருமாளும்- பஞ்ச மூா்த்திகளுடன் நந்தி வாகனத்தில் அகத்தீஸ்வரரும் அமா்ந்து வந்து ஹரிஹரன் கடை வீதியில் பக்தா்களுக்கு காட்சி அளித்தனா். அகத்தீஸ்வரரிடம் இருந்து பூ, பழம் மாலை உள்ளிட்ட வரிசைகள் மேள தாளத்துடன் எடுத்து செல்லப்பட்டு கரிகிருஷ்ண பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது.
அதேபோல் கரிகிருஷ்ண பெருமாளிடம் இருந்து எடுத்து வரப்பட்ட மாலை உள்ளிட்ட வரிசை பொருள்கள் அகத்தீஸ்வரருக்கு அணிவிக்கப்பட்டன. பின்னா், மாட வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.
திருவிழாவில் பொன்னேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா். 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.