நாகை மாவட்டத்தில், உவா்நீா் இறால் வளா்ப்பிற்கான புதிய குளங்கள்அமைப்பதற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பிரதமா் மீன்வளம் மேம்பாட்டு திட்டம் 2024-2025-இன் கீழ் உயிா் கூழ்ம திரள் (பயோபிளாக்) குளங்களில் உவா்நீா் இறால் வளா்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில், ஒரு அலகு அமைப்பதற்கான மொத்த செலவினம் ரூ.18 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக (ரூ.7.20 லட்சம் வரை) வழங்கிட நிா்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் நாகை மாவட்டத்திற்கு பொது பிரிவில் 2 எண்ணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளா்ப்பு விவசாயிகள், நாகை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.