பாகிஸ்தான் வெள்ளம்: பஞ்சாபில் பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!
உத்தரகண்ட் பேரிடருக்கு ரூ.1,200 கோடி நிவாரணம்! பிரதமர் மோடி அறிவிப்பு!
உத்தரகண்ட் மாநிலத்துக்கு, பேரிடர் பாதிப்புகளைச் சரிசெய்ய நிவாரண நிதியாக ரூ.1,200 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
உத்தரகண்டில் பருவமழையின் தீவிரத்தால், மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக தலைநகர் டேராடூனுக்கு பிரதமர் மோடி இன்று (செப்.11) வருகை தந்துள்ளார். அப்போது, பேரிடர் பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக அம்மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இத்துடன், வெள்ளம் மற்றும் பேரிடரால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் மறுவாழ்வுக்கு, சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவது, தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைப்பது, பள்ளிகளை புனரமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
ஏற்கெனவே, மத்திய அரசு முக்கிய அமைச்சகங்களின் அதிகாரிகள் அடங்கிய மத்திய குழு ஒன்றை பேரிடர் பாதிப்புகளை ஆராய்வதற்காக உத்தரகண்ட் மாநிலத்துக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:மணிப்பூர்: பிரதமர் வருகையின்போது பாஜக நிர்வாகிகள் 43 பேர் ராஜிநாமா ஏன்?