எதிர்த்து எவர்வரினும் எதிர்கொள்வோம்: இபிஎஸ்
எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இதையும் படிக்க: தங்கம் விலை புதிய உச்சம்! இன்றைய நிலவரம்!
இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. நாடறிந்த "ஊழல் திலகங்களான" இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்னைகளையும், அதனை சரிசெய்ய முடியாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசைதிருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது "லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை". அதிலும், கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் ஸ்டாலின், தான் நடத்தும் ஆட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் Knee Jerk Reaction தான் நம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது எவப்பட்டுள்ள இந்த சோதனை.
இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அம்மன் K. அர்ச்சுனன் திறம்பட செய்து வரும் பணியை தடுக்கும் விதமாக , லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது, தீயசக்தி திமுக தெரிந்து கொள்ளட்டும், இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும்,எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம்! 2026-ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.