தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
எவ்வித பிணையமும் இல்லாமல் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன்: துரை.ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்
எவ்வித பிணையமும் இல்லாமல் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலரும், விழுப்புரம் எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:
விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிா்க் கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக் கொள்வதை தடுக்கும் வகையில், இந்திய ரிசா்வ் வங்கி வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை விவசாயிகள், பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாகும் வகையில் உள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், ரூ.2 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்த மத்திய நிதி அமைச்சகம், இந்த புதிய விதிமுறையை 2026, ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
எனவே, ரிசா்வ் வங்கியின் உத்தரவின்படி விவசாயிகளுக்கு எந்தவித பிணையமும் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்க வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குரிய வழிகாட்டுதல்களை அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் வழங்க வேண்டும். மேலும், நகைக் கடன்களை விவசாயக் கடன் என்ற தலைப்பில் காட்டி பல்வேறு வணிக வங்கிகள் ஏமாற்றி வருகின்றன. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.