கங்கா மாதாவை மோடி அரசு ஏமாற்றிவிட்டது: கார்கே குற்றச்சாட்டு
கங்கையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் மோடி அரசு கங்கா மாதாவை ஏமாற்றிவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முக்வா கங்கை அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்த பிரதமர் மோடி, கங்கா மாதேவி தன்னை தத்தெடுத்தாக உணர்வதாகக் கூறியுள்ளார். கங்கா தேவியின் ஆசிர்வாதங்களே தன்னை மக்களுக்கு செய்ய வைத்ததாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில்,
"கங்கை அன்னை தன்னை ஆசிர்வதித்திருப்பதாக பிரதமர் மோடி கூறினார், ஆனால் உண்மை என்னவென்றால், கங்கையை சுத்தம் செய்வதற்கான தனது வாக்குறுதியை அவர் மறந்துவிட்டார்.
கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு, 2014 ஆம் ஆண்டு, நமாமி கங்கா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில், 2026- மார்ச்சுக்குள் ரூ. 42,500 கோடி நிதி பயன்படுத்தப்பட திட்டமிட்டது. ஆனால் டிசம்பர் 2024 வரை ரூ. 19,271 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நமாமி கங்கா திட்டத்தின் 55% நிதியை மோடி அரசு செலவிடவில்லை. கங்கை மீது ஏன் இவ்வளவு அலட்சியம்?
2015 ஆம் ஆண்டில், நமது வெளிநாடுவாழ் இந்திய நண்பர்களை கங்கை நதிக்கு நிதியுதவி அளிக்க மோடி வலியுறுத்தினார்., அதன்படி 2024 மார்ச் வரை ரூ. 876 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது, ஆனால், அதில் 56.7% இன்னும் பயன்படுத்தப்படவில்லை.
2024 நவம்பரில் மாநிலங்களவை அளித்த பதிலில், நமாமி கங்கா திட்டங்களில் 38% இன்னும் நிலுவையில் இருப்பதாகக் கூறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய மாசுபட்ட நீரில் 75% நேரடியாக கங்கையில் கலக்கிறது. 97% கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் விதிகள் பின்பற்றப்படவில்லை.
பிகாரில் 46% கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படவில்லை.
இதையும் படிக்க | வருமானம் மட்டுமல்ல; இனி இமெயில், சமூக வலைத்தளங்களையும் வருமான வரித் துறை ஆய்வு செய்யும்!
மேற்கு வங்கத்தில் 40 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படவில்லை; 95% சுத்திகரிப்பு நிலையங்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை.
மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் கங்கையின் தூய்மையைப் பராமரிக்க நிர்வாகம் தவறியது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு நவம்பரில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அந்த நகரில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்தது அல்ல என்றும் கூறியது.
2025 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் ஆற்றில் மலக்கழிவு(கோலிஃபார்ம்) அளவுகள் 2,500 யூனிட்/100 மிலி என்ற பாதுகாப்பான வரம்பைவிட மிக அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தது. பிரயாக்ராஜில் உள்ள சாஸ்திரி பாலம் அருகே 11,000 யூனிட்/100 மிலி ஆகவும், திரிவேணி சங்கமத்தில் 7,900 யூனிட்/100 மிலி ஆகவும் இருந்தது.
இது கடுமையான மாசுபாட்டின் அறிகுறியாகும். 2024 மே - ஜூன் மாதங்களுக்கு இடையில் கங்கையில் பிளாஸ்டிக் மாசுபாடு 25% அதிகரித்துள்ளது, இது மாசு நெருக்கடியை மேலும் அதிகரித்தது.
'கங்கா கிராம்' என்ற பெயரில், மோடி அரசு கழிப்பறைகளை மட்டுமே கட்டியுள்ளது. 5 மாநிலங்களில் கங்கை நதிக்கரையோரம் 1,34,106 ஹெக்டேர் பரப்பளவில் ரூ. 2,294 கோடி மதிப்பீட்டில் காடுகள் வளர்ப்பு மேற்கொள்ளப்படவிருந்தது. ஆனால் 2022 வரை, காடுகள் வளர்ப்பில் 78% செய்யப்படவில்லை மற்றும் 85% நிதி பயன்படுத்தப்படவில்லை என்று ஆர்டிஐ வெளிப்படுத்தியுள்ளது.
கங்கை நமக்கெல்லாம் உயிர் கொடுப்பது. இது இந்தியாவின் கலாசார மற்றும் ஆன்மீக பாரம்பரியம், ஆனால் மோடி அரசு கங்கையை சுத்தம் செய்தல் என்ற பெயரில் கங்கா மாதாவை ஏமாற்றியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.