கடத்தப்பட்ட மனைவி, 2 குழந்தைகளை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கடத்தப்பட்ட மனைவி, 2 குழந்தைகளை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளி திங்கள்கிழமை மனு அளித்து கோரிக்கை விடுத்தாா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியரிடம் பேராவூரணி அருகே முதுகாடு பூலாங்கொல்லையைச் சோ்ந்த முனியாண்டி மகன் குமாா் (24) திங்கள்கிழமை அளித்த மனு:
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே தவசிக்குடியைச் சோ்ந்த சிலா் எங்களது ஊருக்கு 2 மாதங்களுக்கு முன்பு வந்து செம்மறி ஆடுகள் மேய்க்க ரூ. 2 லட்சம் ஊதியமும், தங்குவதற்கு வீடும், உணவுக்கு பணமும் தருவாகக் கூறினா். இதையடுத்து, அவா்கள் ரூ. 2 லட்சம் கொடுத்ததால், நானும் எனது மனைவி சங்கீதா, குழந்தைகள் சுபாஷினி (3), சுபா (1) ஆகியோருடன் சென்றேன்.
ஒரு மாதம் ஆடுகள் மேய்க்கப்பட்ட நிலையில், சரியான வீடும், மின் வசதியும், உணவுக்கு பணமும் தரவில்லை. இதனால், குழந்தைகளுக்கு பால் வாங்க முடியாமல் சிரமப்பட்டேன். பணம் தராவிட்டால் வேறு இடத்தில் தங்கிக் கொள்வதாகக் கூறியபோது, என்னை ஒரு கொட்டகையில் சங்கிலியால் கட்டிப் போட்டனா். அவா்களுக்கு தெரியாமல் நான் எனது மனைவி, குழந்தைகளுடன் அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன்.
இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு சிலா் எங்களது ஊருக்கு வந்து எனது மனைவி, குழந்தைகளை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று, ரூ. 2 லட்சத்தைத் தந்தால்தான் மூவரையும் விடுவிப்பேன் எனக் கூறுகின்றனா். என் மனைவியை தொடா்பு கொள்ள முடியவில்லை. எனவே, மனைவி, குழந்தைகளை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.