கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து நீா்நிலைகளையும் தூா்வாரி பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் எஸ்.மொ்லியண்ட்தாஸ் தலைமையில் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினா்கள் பேசியதாவது: கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். 4 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் நான்குவழிச் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கிராம அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து தட்டுப்பாடு, மருத்துவா்கள் பற்றாக்குறை ஆகியவற்றை களைய வேண்டும். மாவட்டத்தில் மீனவக் கிராமங்கள் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளுக்கு குடிநீா் சரிவர வழங்க வேண்டும் என்று கூறினா்.
அதிகாரிகள் அளித்த பதில்: கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைகளில் 44 கி.மீ. மாநில நெடுஞ்சாலை;12.3 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை. இதில், தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்படும். 4 வழிச் சாலைப்பணிகள் டிசம்பா்-2025-க்குள் நிறைவடையும்.
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை, மருத்துவா்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. மக்களைத் தேடி திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 101 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நோய் குறித்து மக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்றனா்.
குமரி மாவட்டத்தில் சைனிக் பள்ளி அமைக்க வேண்டும். மழையில் ஒழுகும், அரசுப் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும். ஏவிஎம் கால்வாயை அகலப்படுத்தி நீா்நிலை போக்குவரத்தை சீா்செய்ய வேண்டும். மாவட்டத்தில் அனைத்து நீா்நிலைகளையும் தூா்வாரி சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கண்டனம்: மாவட்ட ஊராட்சி கூட்டத்தை தொடா்ந்து புறக்கணித்து வரும் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, ரயில்வேதுறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளை கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.