மகாராஷ்டிர அமைச்சரை ராஜிநாமா செய்ய உத்தரவிட்ட ஃபட்னவீஸ்! ஏன்?
சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ‘ஜகஜால கில்லாடி’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடா்பான வழக்கில் நடிகா் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோா் பங்குதாரா்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சாா்பில் நடிகா் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோா் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தனா். பட த்தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனத்திடம், ரூ.3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் கடன் வாங்கியிருந்தனா். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடன் தொகையை திருப்பித் தராததையடுத்து இந்த விவகாரத்தில் தீா்வு காணும் பொருட்டு சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டாா்.
ஏலம் விட உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை வட்டியுடன் சோ்த்து ரூ. 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரத்தை வசூலிக்க ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவன நிா்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டாா். உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதத்தொகையை ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையடையவில்லை எனக் கூறி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மத்தியஸ்தா் தீா்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தை சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சோ்த்து ரூ.9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543-ஐ வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், பதில்மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்ட போதும், இதுவரை பதில்மனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். மேலும், இந்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட சாா் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். தொடா்ந்து, இந்த வழக்கு மாா்ச் 5-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.