ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடித்து அழிப்பு
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் பயங்கரவாதிகளின் மறைவிடம் ஒன்று கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறைவிடத்திலிருந்து இரண்டு வயர்லெஸ் பெட்டிகள், ஐந்து யூரியா பாக்கெட்டுகள், எரிவாயு சிலிண்டர், பைனாகுலர், மூன்று கம்பளி தொப்பிகள், மூன்று போர்வைகள் மற்றும் பாத்திரங்கள் மீட்கப்பட்டன. இரண்டு ஐஇடிகள் எஃகு வாளிகளுக்குள் புதைக்கப்பட்டிருந்ததோடு மூன்று டிபன் பாக்ஸ்களிலும் அடைக்கப்பட்டிருந்தன என்று அதிகாரிகள் கூறினர்.
பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தம்! அணைகளின் மதகுகள் மூடல்!
அரை கிலோ முதல் ஐந்து கிலோ வரை எடையுள்ள பயன்படுத்த தயாராகவிருந்த அனைத்து ஐஇடிகளும், அந்த இடத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. இதனால் எல்லை மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன என்று அதிகாரிகள் மேலும தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22 நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். தாக்குதலைத் தொடா்ந்து தலைமறைவாகியுள்ள பயங்கரவாதிகளைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.