வங்காளதேசம்: டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து; விமான சேவைகள் பாதிப்பால...
டாலர் பிரச்னையால் திணறும் மாலத்தீவு; சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; என்ன செய்யப்போகிறது இந்தியா?
மாலத்தீவு என்றாலே உடனே நினைவுக்கு வருவது சுற்றுலாதான். இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு, சுற்றுலாவுக்குப் பெயர்போன தீவு. ஆனால் கொரோனாவுக்குப் பிறகு மாலத்தீவின் சுற்றுலா வருமானம் மெல்ல சரிவை நோக்கித் திரும்பியது. அதனால், மாலத்தீவின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவிலான அந்நியச் செலாவணி கையிருப்பால் மாலத்தீவு பொருளாதாரம் திணறிக்கொண்டிருக்கிறது.
அதன் விளைவாக ஏற்படும் சிக்கலால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்கள்தான்.
என்ன பிரச்சனை?
மாலத்தீவின் அந்நியச் செலாவணி வரவு குறைந்திருப்பதால், மாலத்தீவில் பணியாற்றும் இந்தியர்கள், இந்தியாவில் இருக்கும் தங்கள் குடும்பத்துக்கு பணம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதை இன்னும் புரியும்படி சொல்வதானால், உலக நாடுகளுக்கு மத்தியில் டாலர், யூரோ போன்ற சில பணங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன.
அதேநேரம், உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி பணப்பரிவர்த்தனைகள் இருக்கின்றன. இந்தியாவுக்கு ரூபாய், ரஷ்யாவுக்கு ரூபிள், ஜப்பானுக்கு யென், சீனாவுக்கு யுவான், அமெரிக்காவுக்கு டாலர், சவூதி அரேபியாவுக்கு ரியால் என்பதைப் போல மாலத்தீவுக்கு ரூஃபியா.
மாலத்தீவில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாலத்தீவின் ரூஃபியாவே சம்பளமாக வழங்கப்படும்.
அந்தப் பணம் இந்தியாவில் செல்லாது என்பதால், அதை உலகம் அங்கீகரிக்கும் பணமாக, அதாவது வங்கியில் மாலத்தீவு பணத்தைக் கொடுத்துவிட்டு, டாலராக மாற்றிக்கொள்ள வேண்டும்.

அந்த டாலரை இந்தியாவுக்கு அனுப்புவார்கள். அது இந்திய மதிப்பில் பணமாக மாற்றப்படும்.
இந்த நடைமுறையில், வங்கி இருப்பில் போதுமான டாலர் இல்லாதபோது சிக்கல் ஏற்படும். அந்தச் சிக்கலைத்தான் தற்போது மாலத்தீவில் இருக்கும் இந்தியர்கள் எதிர்கொள்கிறார்கள்.
அந்நியச் செலாவணி எப்படி குறையும்?
ஒரு நாட்டுக்கு அந்நியச் செலாவணி வருவதற்குப் பல்வேறு வழிகள் இருந்தாலும், சுற்றுலா வரும் பயணிகள் மூலம், முதலீடு செய்யவரும் வெளிநாட்டு முதலாளிகள், ஏற்றுமதி செய்யும்போது, வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அனுப்பும் பணம், வெளிநாட்டுக் கடன் உள்ளிட்ட பல வழிகளில் அந்நியச் செலாவணி நாட்டுக்குள் உள்வரும்.
மாலத்தீவைப் பொருத்தவரை சுற்றுலாதான் அந்நியச் செலாவணிக்கு மூலதனம்.
கடந்த சில வருடங்களாக மாலத்தீவின் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட சரிவால் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
பாதிக்கப்படும் இந்தியர்கள்
மாலத்தீவில் பணியாற்றும் சுமார் 2,50,000 மேற்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுகிறார்கள்.
அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை டாலராக மாற்றி, எஸ்.பி.ஐ வங்கி மூலமே அவர்களின் குடும்பத்தினருக்கு அனுப்பி வந்தனர்.
இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு முழுச் சம்பளமும் அனுப்பப்பட்ட நிலையில், 500 டாலர் வரை மட்டுமே அனுப்ப முடியும் எனக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தது எஸ்.பி.ஐ.
கடந்த ஆண்டு 500 டாலரிலிருந்து 400 டாலர் (சுமார் ரூ.34,000) வரை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யலாம் எனக் இரண்டாவது முறையாகக் குறைத்தது.
தற்போது அதையும் குறைத்து, இந்த மாதம் 25-ம் தேதியிலிருந்து 150 டாலர் (சுமார் ரூ.13,000) வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும் எனக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
இதனால், இந்தியாவில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் வாழ்வாதாரத்துக்குப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என அஞ்சுகின்றனர்.
இது தொடர்பாக இந்திய அரசின் மாலத்தீவு இந்திய உயர் ஆணையத்திடம் மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்கள் முறையிட்டிருக்கின்றனர்.
என்ன சொன்னது இந்திய ஆணையம்
இந்தியர்களின் முறையீட்டுக்குப் பதிலளித்திருக்கும் வகையில் இந்திய ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்களின் கவனத்திற்கு....
மாலத்தீவில் உள்ள இந்திய ஸ்டேட் வங்கி (SBI), வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் மாதாந்திர உச்ச வரம்பை (Outward Remittance Limit) அக்டோபர் 25, 2025 முதல் 400 அமெரிக்க டாலரிலிருந்து 150 அமெரிக்க டாலராகக் குறைத்திருக்கிறது.
இதனால் இந்தியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மாலேயில் உள்ள இந்திய உயர் ஆணையம் அறிந்துள்ளது. தற்காலிக டாலர் பற்றாக்குறையே இத்தகைய முடிவுக்குக் காரணம்" என்று இந்திய ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தங்கள் சம்பளத்தை மாலத்தீவு ரூஃபியாவில் (MVR) பெறுபவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரச்னையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பணம் அனுப்புவதில் உள்ள சவால்களைத் தணிக்கும் வகையிலும், இப்பிரச்னையை விரைவில் தீர்க்க உதவும் வகையிலும், இந்திய உயர் ஆணையம் மாலத்தீவு அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகமானது, மாலத்தீவு நிதி ஆணையம் (Maldives Monetary Authority) மற்றும் சம்பந்தப்பட்ட மாலத்தீவு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இப்போதைக்கு இந்தச் சூழலை எளிதாக்கவும், இந்திய ஊழியர்கள் சுலபமாகப் பணம் அனுப்பவும் பல்வேறு நடவடிக்கைகள் ஆராயப்படுகின்றன.
அவற்றில், இந்திய ரூபாய் - மாலத்தீவு ரூஃபியா (INR-MVR) பரிமாற்ற முறை குறித்த பேச்சுவார்த்தைகள், பிரதமர் மோடி மாலத்தீவுக்கு வந்தபோது (ஜூலை 2025) கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, மாலத்தீவில் யு.பி.ஐ. (UPI) செயல்படுத்தப்படுவது, ரூபே கார்டுகளின் பயன்பாட்டை அதிகரிப்பது, மாலத்தீவில் உள்ள பல்வேறு வங்கிகளில் இந்திய ரூபாய் கணக்குகளைத் தொடங்குவது போன்றவை விவாதிக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்டவரின் குரல்
இந்த விவகாரம் தொடர்பாக விவரம் கேட்க மாலத்தீவில் ஆசிரியையாகப் பணியாற்றிவரும் ஸ்ரீஜாவிடம் பேசினோம்.
``நான் 2024 ஜூலையில் மாலத்தீவுக்கு ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தேன். அப்போது இந்தியாவுக்கு 500 டாலர் வரை பணம் அனுப்ப முடியும்.
ஒருவருக்கு 1000 டாலர் ஊதியம் என்றால், ஒவ்வொரு மாதமும் 500 டாலர் மட்டுமே வீட்டுக்கு அனுப்ப முடியும். மீதமிருக்கும் பணத்தை என்ன செய்வது?

அதே நேரம் இந்தியாவில் இருக்கும் குடும்பத்துக்குத் தேவை இருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? அவசரத் தேவை இருக்கும் சிலர், பிளாக் மார்க்கெட்டில் கருப்புப் பணமாக அந்தப் பணத்தை அனுப்ப முயல்கிறார்கள்.
ஆனால், அந்தப் பணம் வீட்டுக்குச் சென்று சேரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நான் இருக்கும் பகுதியில் வயதான இந்திய ஆசிரியர் இருக்கிறார்.
அவர் தன் குடும்பத்தின் அவசரத் தேவைக்கு, முகவர்கள் மூலம் அனுப்பிய ரூ.50,000 வீட்டுக்குச் சென்று சேரவே இல்லை. அவரின் உழைப்பு வீணானதுதான் மிச்சம்.
இங்கு ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என பல துறைகளில் வேலை செய்கிறார்கள். இங்கு வருவதற்காக வாங்கிய கடன், வங்கிக் கடன்கள், மருத்துவத் தேவைகள், வீட்டுச் செலவுகள், கல்விச் செலவுகள் என மாலத்தீவில் வாழும் ஊழியர்களின் குடும்பங்கள் பெரும் துயரத்தைச் சந்தித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.
இந்தியாவின் எஸ்.பி.ஐ வங்கி மட்டும்தான் இந்தியர்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது.
இது தொடர்பாக இந்திய உயர் ஆணையத்திடம் முறையிட்டால், உங்கள் முதலாளிகளை டாலரில் சம்பளம் கொடுக்க ஆர்வமூட்டுங்கள் என்கிறது. இது எப்படி சாத்தியம் எனத் தெரியவில்லை.

இந்திய அரசும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க பெரிதாக எந்த முயற்சிகளையும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. இங்கு வந்து உழைப்பதே குடும்பத்துக்காகத்தான். அவர்களுக்கே எங்கள் உழைப்பின் பலன் சென்று சேரவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது?
மேலும், இந்தக் கட்டுப்பாடு எப்போது வரை என்றும் தெரிவிக்கவில்லை. சிரமத்தால் திண்டாடுகிறோம்" என்றார்.
இந்திய அரசு மாலத்தீவில் உழைக்கும் இந்தியர்களின் சிரமத்தைக் கவனத்தில் கொள்ளுமா?