``குறைந்த விலைக்கு பட்டாசு; ஆன்லைன் விளம்பரம் நம்பி ஏமாறாதீர்’’ - எச்சரிக்கும் க...
"ஆணவப் படுகொலையை தடுக்க ஆணையம்; விரைவில் உரிய சட்டம்" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
நெல்லை கவின் ஆணவப்படுகொலை, திண்டுக்கல் ராமச்சந்திரன் என நாடுமுழுவதும் தினமும் ஆணவப்படுகொலைகள் சாதியின் பெயரால் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாதியவாத சக்திகள் சாதிப் பெருமையைப் பரப்புவதால் ஏற்படும் விளைவுகளால் இந்தக் கொடூரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
பட்டியல் சாதியினர் மட்டுமல்ல, அனைத்து சாதிகளிலும் இந்த ஆணவப்படுகொலைகள் நடக்கின்றன. இதைத் தடுக்க தேசிய அளவில் ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதுகுறித்து மாநில அரசும், மத்திய அரசும் கண்டுகொள்ளாமலே தவிர்த்து வருக்கின்றன.

இந்நிலையில் இன்றைய தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின், ஆணவப் படுகொலையை தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டில் அவ்வப்போது ஏதெனும் ஒரு தொகுதியில் நடக்கும் துயர சம்பவமான ஆணவப்படுகொலைகள், நம் நெஞ்சை உலுக்கி, ஒட்டுமொத்த சமூகத்தையே தலைகுனிய வைத்துவிடுகிறது.
பெண்கள் தங்கள் வாழ்வை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை பறித்துவிடும் ஆணாதிக்கமும் இந்தக் குற்றச் செயலான ஆணவப்படுகொலைக்குப் பின்னால் இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
சுயமாரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ஆணப்படுகொலையைத் தடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி என்னிடம் கொடுத்தார்.
ஆணவப்படுகொலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி இந்த அநீதியைத் தடுக்க வேண்டும். ஆணவப்படுகொலைக்கு எதிரான சமூக மாற்றத்தில் சமூக நல இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், சமூக ஆர்வல அமைப்புகள், மக்கள் எல்லோருக்கும் இந்தப் பொறுப்பு இருக்கிறது. சாதிக்கெதிரான, ஆணவப்படுகொலைக்கு எதிராக, சமத்துவமின்மைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுத்துப் பேச வேண்டும்.

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம் சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களைப் பெற்று, உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும், அதன் அடிப்படையில் அரசு விரைவில் சட்டங்கள் இயற்றும். "