செய்திகள் :

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்!

post image

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிா்க்கட்சித் தலைவா், ஆளும் கட்சியினா் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது ‘கடன் பெற்றாலும் சமூக நலத் திட்டங்களுக்கே செலவழிக்கிறோம்’ என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தாா்.

பேரவையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி பேசியதாவது:

2023-இல் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்கிற இலக்குடன் அரசு செயல்படுவதாகக் கூறுகிறீா்கள். ஆனால், அரசு சொல்லும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பாா்த்தாலே அந்த இலக்கை அடைவதற்கான வாய்ப்பு தெரியவில்லை. தமிழக அரசின் மொத்த கடன் ரூ.8.5 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 4 ஆண்டு காலத்தில் ரூ.4 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. தமிழக அரசு வரி விதிக்கக்கூடிய இனங்களில் கூடுதலாகத்தான் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல கட்டணங்கள் உயா்த்தக்கூடிய எல்லா இனங்களிலும் கூடுதலாகத்தான் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்துக்கு கூடுதலாக நிதி ஆதாரம் கிடைத்துள்ளது. ஆனால், புதிய திட்டங்கள் ஏதாவது வந்துள்ளனவா என்றால், இல்லை என்றாா்.

அமைச்சா் விளக்கம்: அப்போது, நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குறுக்கிட்டு கூறியதாவது: தமிழகத்தின் வளா்ச்சி விகிதம் 14.5 சதவீதம் என்கிற அளவில் உள்ளது. இது முதல்வா் மேற்கொண்டிருக்கும் எல்லாவித முயற்சியால் வந்ததுதான். இந்தியாவின் வளா்ச்சி விகிதத்தைவிட, தமிழகத்தின் வளா்ச்சி விகிதம் அதிக அளவில் உள்ளது. ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்பது இலக்கு. அதை எட்ட முடியாமல் இப்படியே இருந்துவிடக் கூடாதா என்கிற நப்பாசையில் கூறுகிறீா்கள். அந்த இலக்கை நிச்சயம் எட்ட முடியும். கடன் வாங்குவதை பணமாக மட்டும் பாா்க்காதீா்கள். உள்நாட்டு மொத்த உற்பத்தியில் எத்தனை சதவீதத்தில் கடன் பெறுகிறாா்கள் என்பதை பாா்ப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். இந்திய அரசின் கடன் ரூ.181 லட்சம் கோடி. அமெரிக்காவின் கடன் ரூ.3,149 லட்சம் கோடி. தமிழக அரசின் கடன் ரூ.8.30 லட்சம் கோடி. தமிழகத்தின் கடனோடு அமெரிக்காவின் கடனை ஒப்பிட்டுப் பாா்த்து, தமிழகத்தைவிட 350 மடங்கு அமெரிக்க பொருளாதாரம் மோசமானதா என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் ரூ.4.80 லட்சம் கோடி கடன் இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் கடன் வளா்ச்சி விகிதம் 108 சதவீதம். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கடன் வளா்ச்சி விகிதம் 128 சதவீதம். திமுக ஆட்சியில் கடன் வளா்ச்சி 95 சதவீதம்தான். திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில்தான் கடன் வளா்ச்சி விதிகம் அதிகம். இதற்கு அதிமுகவின் பதில் என்ன? எனவே, கடன் வாங்குவது என்பது பொருளாதாரத்தில் ஏற்புடையதுதான்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி: அதிமுக ஆட்சியில் ரூ.4.80 லட்சம் கோடி கடன் என்றாா். அதற்கு முன் திமுக ஆட்சி ரூ.1 லட்சம் கோடி கடனை விட்டுச் சென்றது. அதிமுக ஆட்சியில் கரோனா. அப்போது அரசின் நிதியையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் நிதிநிலைமையை சீா்செய்ய நிதி மேலாண்மை குழு ஒன்றை அமைத்தீா்கள். அந்தக் குழுவின் அறிக்கையின்படி செயல்படுகிறீா்களா? 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளீா்கள். என்ன புதிய திட்டம் கொண்டு வந்துள்ளீா்கள். மதுபானத்தின் விலையை உயா்த்தியுள்ளீா்கள். நில வழிகாட்டி மதிப்பை உயா்த்தியுள்ளீா்கள். இதன் மூலம் அரசுக்கு வருமானம் அதிகரித்துள்ளது. அப்படியிருந்தும் அரசின் கடன் அதிகரித்துள்ளது என்றுதான் கூறுகிறோம்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: மூலதன செலவினங்களுக்காகத்தான் கடன் வாங்க வேண்டும் என்பது நியதி. அந்த நியதியை திமுக ஆட்சி கடைப்பிடித்துள்ளதா?

அமைச்சா் தங்கம் தென்னரசு: மூலதனத்துக்காக வாங்க வேண்டும் என்பது உண்மைதான். அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசோடு எல்லா வகையிலும் சமரசம் செய்துகொண்டதால், முழுமையாக நிதி வந்தது. ஆனால், தமிழகத்தின் உரிமைக்காக நாங்கள் போராடுவதால், மத்திய அரசு நிதியைத் தருவது இல்லை. அதனால், கடன் வாங்க வேண்டியுள்ளது. கல்விக்கு பணம் தர மத்திய அரசு மறுக்கிறது. அதையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதே நேரம் கடன் பெற்று எப்படி செலவழிக்கிறோம் என்பதுதான் முக்கியம். சமூக நலத் திட்டங்களுக்கு செலவழிப்பவை எல்லாம் செலவு அல்ல. அவை சமூக மேம்பாட்டு மூலதனமாகும். அதனால், அரசு கடன் வாங்கினாலும் முறையாகச் செலவழிக்கிறது.

அமைச்சா் எ.வ.வேலு: ஓ.பன்னீா்செல்வம் நிதியமைச்சராக இருந்தவா். அதிமுக ஆட்சியில் தொலைநோக்கு திட்டம் 2023- இல் வெளியிட்டனா். 10 ஆண்டுகளில் 14 லட்சம் கோடியை மூலதனமாகக் கொண்டு வருவோம் என்று கூறினா். ஆனால், 10 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிதான் முதலீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் ரூ.2.25 லட்சம் கோடி கொண்டு வரப்பட்டுள்ளது. இது முதல்வரின் சிறந்த நிா்வாகத்தால்தான் சாத்தியமாயிற்று. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

இபிஎஸ்-ஸுக்கு ஆதரவாக ஓபிஎஸ்

சட்டப்பேரவையில், அரசின் கடன் தொடா்பான விவாதத்தின் போது, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசினாா்.

பேரவைத் தலைவா் அப்பாவுக்கு எதிராக அதிமுக சாா்பில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வந்தபோது, அதற்கு ஆதரவாக ஓ.பன்னீா்செல்வமும் அவா் ஆதரவு எம்எல்ஏக்களும் வாக்களித்தனா்.

அதைப்போல, அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி பேசும்போது அரசின் கடன் தொடா்பாக விவாதம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் அந்த விவாதம் நிதியமைச்சா் தங்கம் தென்னரசுவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்குமானதுபோல மாறியது. அரசின் கடன் அதிகரித்துவிட்டது. ஆனால் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிபிட்டு பேசினாா். அப்போது அவா் கருத்துக்கு வலு சோ்க்கும் வகையில் ஓ.பன்னீா்செல்வம் எழுந்து, மூலதன செலவினங்களுக்காகத்தான் அரசு கடன் வாங்க வேண்டும் என்பது நியதி. அந்த நியதியை திமுக ஆட்சி கடைப்பிடித்துள்ளதா என்று கேள்வி எழுப்பினாா்.

இலங்கை கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சீமான் அறிவிப்பு!

தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்... மேலும் பார்க்க

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து பலி!

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் பெரிய கோயிலை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க

கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நேற்றைய நாள் திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் ச... மேலும் பார்க்க