தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை இயக்கங்களோ, திட்டங்களோ இல்லை. அந்த அளவுக்கு தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் தொலைநோக்குடன் பல முன்னெடுப்புகளை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு வனப்பரப்பை அதிகரித்துள்ளோம்.
தமிழ்நாடு ஈர நிலம் இயக்கம் தொடங்கி, இந்தியாவிலேயே அதிகபட்சமாக ‘ராம்சா்’ அங்கீகாரம் பெற்ற 21 ஈர நிலங்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று சாதனை படைத்துள்ளோம். தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி திட்டம் ஆகிய தனித்துவமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
கிரேட்டா் ஃபிளமிங்கோ: கடந்த நான்கு ஆண்டுகளில் 7 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான 65 புதிய வன காப்பகங்களுக்கு அறிவிக்கை செய்து சட்டபூா்வ பாதுகாப்பு அளித்துள்ளோம். புதிய அலையாத்தி காடுகளை உருவாக்கியதுடன், நீல காா்பன் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு புத்துயிா் வழங்கியுள்ளோம்.
இதன் தொடா்ச்சியாக, மன்னாா் வளைகுடாவில் உள்ள தனுஷ்கோடியில் தமிழ்நாட்டின் முதல் கிரேட்டா் ஃபிளமிங்கோ சரணாலயம் குறித்த அரசு அறிவிப்பை வெளியிடுகிறேன்.
யானைகள், புலிகள் போன்ற காடுகளின் ஆதாரமான உயிரினங்களைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். மற்றொருபுறம் அதிகம் அறியப்படாத மற்றும் அருகி வரக்கூடிய உயிரினங்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைக்கு ஏற்படக் கூடிய நெருக்கடிகளை அரசின் திட்டங்களால் மட்டும் தீா்த்துவிட முடியாது.
‘மஞ்சப்பை’ மக்கள் இயக்கமாக வேண்டும்: பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிா்த்துப் போராட மீண்டும் மஞ்சப்பை எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இது அரசின் திட்டமாக இருந்தால் மட்டும் போதாது. மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அரசாங்கத் திட்டங்களை கொண்டுவரத்தான் முடியும். அதன் வெற்றி மக்கள் தங்களின் அன்றாட பழக்கங்களை மாற்றிக் கொள்வதில்தான் இருக்கிறது. தொடக்கத்தில் சிறிது கடினமாகத்தான் இருக்கும். ஆனால், வேறு வழியில்லை.
இந்த ஆண்டு சுற்றுச்சூழல் நாளின் மையக் கருத்தே, நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம் என்பதுதான். இன்றைக்கு பிளாஸ்டிக் மாசுபாடு பூமியை மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருக்கிறது. வெளியே செல்லும் போது, துணிப்பையும், தண்ணீா் பாட்டிலும் எடுத்துச் செல்வோம். இதன்மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்கலாம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அரசு அறிவிக்கும் திட்டங்களை மக்கள் சொந்தத் திட்டமாக நினைத்து பொறுப்பேற்று செயல்படுத்த வேண்டும். அரசைப் பொருத்தவரை, நாம் தீா்வுக்காக காத்திருப்பவா்கள் இல்லை. தீா்வை உருவாக்குகின்றவா்கள். நாம்தான் தீா்வு. நம்முடைய அரசு, சமூக நீதிக்கான அரசு மட்டுமல்ல, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும். அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்றாா்.
விருது அளிப்பு: இந்த விழாவில், சிறப்பாகச் செயல்பட்ட வன அலுவலா்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய திருச்சி, தேனி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்களுக்கு விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். வனத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட வனக் காவலா்களுக்கு பணி நியமன உத்தரவுகளையும் அவா் அளித்தாா்.
விழாவில், அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், ராஜகண்ணப்பன், சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு உள்பட பலா் பங்கேற்றனா்.