பக்ரீத் பண்டிகை: சிவகங்கையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!
சிவகங்கை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
பக்ரீத் பண்டிகை, உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இறைவனின் தூதர் இப்ராஹிம் நபிகளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைகள் நடத்துவதோடு இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். அதனால் இதை ஈகைத் திருநாள் என்றும் அழைக்கின்றனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி சிவகங்கை நகரில் நேருவீதியில் உள்ள வாலாஜா நவாப் பள்ளிவாசலில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இதைப் போல், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதம் பள்ளிவாசல், ஹவ்வா பள்ளிவாசல், ரோஸ் நகர் அந்-நூர் பள்ளிவாசல், தக்வா பள்ளிவாசல் ஆகிய இடங்களில் நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.