மகளிர் பிரிமீயர் லீக் எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 214 ரன்கள் இலக்கு!
தாமதமாகும் முதுகலை நீட் கலந்தாய்வு: கடும் பணிச்சுமையில் மருத்துவர்கள்
முதுகலை நீட் கலந்தாய்வு தொடங்காததால், மருத்துவமனைகளில், புதிய முதுகலை பயிலும் மருத்துவர்கள் பணியில் இணையாமல், ஏற்கனவே பணியில் இருக்கும் உறைவிட மருத்துவர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
நீட் முதுகலைப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே வெளியான நிலையில், இன்னமும் கலந்தாய்வு நடத்தப்படாமல் உள்ளது.
இதனால், மருத்துவமனையில் புதிய முதுகலை மாணவர்கள் இணையாததால், ஏற்கனவே பணியில் இருக்கும் மருத்துவர்கள் வழக்கமான பணி நேரத்தை விடவும் கூடுதலாக பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த தாமதத்தால், ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் வேகமாக நடந்து வருகிறது. தேர்வெழுதிய மருத்துவர்கள் பலரும் கால விரையத்தைத் தவிர்க்க தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டால், அரசு மருத்துவமனைகளில், இளநிலை மருத்துவர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை ஏற்படும்.
ஏற்கனவே பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு பணிச்சமை ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.
இதில்லாமல், 2025ஆம் ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2024ல் நடந்த தேர்வுக்கான கலந்தாய்வு தொடங்காததால், ஏற்கனவே தேர்வெழுதியவர்களும், தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கும் மன அழுத்தம் அதிகரித்துள்ளது.
வழக்கமாக, உறைவிட மருத்துவர்களின் எண்ணிக்கைக் குறைவுதான். இதில், புதிதாக இளநிலை மருத்துவர்கள் பணியில் சேராததால், எங்களது பணிச்சுமை அதிகரிப்பதோடு, 24 முதல் 30 மணி நேரம் வரை தொடர்ந்து பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் கூறுகிறார்கள்.