மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
திருச்சி: இன்டர்வியூ-க்கு சென்ற இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு; போலீஸ் தீவிர விசாரணை
திருச்சி மாவட்டம், சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின் (வயது: 22). கல்லூரி படிப்பை முடித்த மீரா ஜாஸ்மின், வேலை தேடி விண்ணப்பித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று வேலை விஷயமாக நேர்முகத் தேர்வுக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மீரா ஜாஸ்மின் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். ஆனால் இரவு வரை மீரா ஜாஸ்மின் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், மீரா ஜாஸ்மினின் செல்போன் டவரை வைத்து அவரது இருப்பிடத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, எம்.ஆர்.பாளையம் அருகே உள்ள சனமங்கலம் பகுதியில் இருக்கும் காப்புக் காடு பகுதியிலிருந்து சிக்னல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அந்தக் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த ஒரு பெண்ணின் சடலத்தை போலீஸார் கண்டனர். அந்தப் பிணத்தைக் கைப்பற்றிய போலீஸார் அதுகுறித்து விசாரணை நடத்தினர்.
அவர்களின் முதல்கட்ட விசாரணையில், எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது காணாமல் போன இளம்பெண் மீரா ஜாஸ்மின் என்பது உறுதி செய்யப்பட்டது. அவரை யாரோ கொலை செய்து, உடலை அங்கு எடுத்து வந்து அவரது உடலை எரித்திருக்கலாம் என்று காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மீரா ஜாஸ்மினின் உடலை உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அதோடு, அவரைக் கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்டர்வியூக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற பெண் காப்புக் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.




















